கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மூசாக்குட்டி கடந்த செப்டம்பர் 23-ஆம் தேதி தற்கொலை செய்துக்கொண்டார். இந்நிலையில் சமீபத்தில் அவரது ஃபோனில் பதிவு செய்யப்பட்டிருந்த வீடியோவை அவரது குடும்ப உறுப்பினர்கள் கண்டுபிடித்தனர். மனதை உருக்கும் அந்த வீடியோவில் தன்னுடைய 20 வயது மகள் ஹிபாவைப் பற்றி பேசுகிறார் மூசாக்குட்டி. தன்னுடைய கணவர் வீட்டில் அவருடைய செல்ல மகள் பல்வேறு வகைகளில் துன்புறுத்தப்பட்டதை குறிப்பிடுகிறார். ஹிபாவை அவருடைய கணவர் வீட்டை விட்டு துரத்திவிட்டதால் அவர் தன்னுடைய பச்சிளங்குழந்தையுடன் மூசாக்குட்டியின் வீட்டுக்கு வந்துள்ளார். தன் செல்ல மகளை அந்த நிலைமையில் தன்னால் பார்க்க இயலவில்லை என அந்த வீடியோவில் பல இடங்களில் உடைந்து அழுகிறார் மூசாக்குட்டி.


 “அவள் மிகவும் துன்புறுத்தப்பட்டாள். அவள் கணவர் என்னிடமும் மிகவும் மோசமாக பேசினான். என்னால் அதனை தாங்க இயலவில்லை. என் மகள் என்னிடம் எல்லாவற்றையும் சொன்னாள். அவன் வரதட்சணை கேட்டுக்கொண்டேயிருந்தான். திருமணத்தின்போது 18 சவரன் நகைகளைக் கொடுத்திருந்தேன். அதன் பின்பு 6 சவரன் நகைகளைக் கொடுத்தேன். ஆனாலும் என் மகளை ஏற்றுக்கொள்ள முடியாது என அவன் சொல்லிவிட்டான். அதனால் நான் தற்கொலை செய்துக் கொள்கிறேன்.


என் மகளை ஒரு தற்காலிக ஏற்பாடாக வைத்திருப்பதாக என் மருமகன் என்னிடம் சொன்னார். திருமணம் ஆன இரண்டே வருடங்களில் வாழ்க்கை முழுவதுக்குமான அத்தனை துன்பத்தையும் அனுபவித்து விட்டதாக என் மகள் என்னிடம் சொன்னாள்” என சொல்லி துக்கம் தாளாமல் கதறி அழுகிறார் மூசாக்குட்டி. இதனையடுத்து ஹிபாவின் கணவர் ஹமீதை நேற்று முன்தினம் அக்டோபர் 5ம் தேதி போலீசார் கைது செய்தனர்.


இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஹிபா, ”தன்னுடைய கணவர் வீட்டில் சொல்லண்ணா நிறைய துயரங்களை அனுபவித்ததாக தெரிவித்தார். நிறைய பணம், தங்கம் ஆகியவற்றைக் கேட்டு தன் கணவர் வீட்டார் தன்னை துன்புறுத்தியதாக குறிப்பிட்டார். எல்லா இரவுகளும் தன் கணவர் தன்னை அடித்ததாகவும், நிறைய இரவுகளில் தூங்கியதே இல்லை என்றும் தெரிவித்தார். ஊசியால் தன் உடலெங்கும் குத்தி தன்னை துன்புறுத்தியதாகவும் குறிப்பிட்டார் ஹிபா.


 “என் திருமணத்தை பெரிய முறையில் செய்ய வேண்டும் என்பது என் அப்பாவின் ஆசையாக இருந்தது. அவர் எனது திருமணத்தை சிறப்பாக செய்து வைத்தார். அதனால் ஆரம்பத்தில் நான் எதையுமே அவரிடம் சொல்லியதில்லை. ஆனால் ஒவ்வொரு நாளும் வரதட்சணைக் கேட்டு ஹமீது என்னை துன்புறுத்துவார்” என தெரிவித்தார் ஹிபா.


நீங்கள் வீட்டில் இதுபோன்ற வன்முறையை எதிர்கொள்ளும் பெண்ணாக இருந்தால், தேசிய வீட்டு வன்முறை ஹாட்லைன் த்வானிக்கு உடனே அழைத்துப் பேசுங்கள் - 1800 102 7282. மன அழுத்தத்தில் இருக்கும் பெண்களுக்கான தேசிய உதவி எண் 1091.