உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பது புதுச்சேரி அரசுக்கு மிகப்பெரிய அவமானம் என நாராயணசாமி கூறியுள்ளார். புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-


மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி கடந்த ஓராண்டாக டெல்லி, ஹரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக உத்தரபிரதேச மாநிலம் லக்கீம்பூர் பகுதியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் மத்திய மந்திரி அஜய்மிஸ்ராவின் மகன்  தனது   ஆதரவாளர்களுடன் வந்து வாகனத்தை கொண்டு ஏற்றி 4 விவசாயிகளை கொலை செய்துள்ளார்.


நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் குறித்து மத்திய மந்திரியின் மகன் மீது இதுவரை வழக்குப் பதிவு செய்யவில்லை. இந்த நிலையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறச்சென்ற பிரியங்கா காந்தியை போலீசார் கைது செய்தனர். விவசாயிகள் கொலையை உத்தரபிரதேச மாநில அரசு மறைக்க முயற்சிக்கிறது. சத்தீஸ்கர் முதல்மந்திரி, பஞ்சாப் முதல்மந்திரி ஆகியோர் விவசாயிகளை சந்திக்க தடை விதிக்கப்பட்டது.


’பதவிக்காக பாஜகவிடம் சரண் அடைந்துவிட்டார் என்.ரங்கசாமி’ - நாராயணசாமி குற்றச்சாட்டு...!


புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் 3 கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் வார்டுகள் பிரிப்பதில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி உள்பட பல்வேறு கட்சிகள் புகார் அளித்த போது தேர்தல் ஆணையம் அலட்சியம் செய்தது. இந்த நிலையில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு  உள்ளாட்சி தேர்தலை அறிவிப்பை வாபஸ் பெற உத்தரவிட்டது. இது புதுச்சேரி அரசுக்கு மிகப்பெரிய அவமானம்.




இதன் மூலம் புதுச்சேரி ஆளும் அரசுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. நகராட்சிகளுக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது. புதிதாக இடஒதுக்கீட்டில் உரிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். தன்னிச்சையாக தேர்தல் ஆணையர் தேர்தலை அறிவிப்பதும், தவறு நடந்துவிட்டதாக கூறி தேர்தலை நிறுத்துவதும் புதுவை அரசுக்கு இழுக்கை ஏற்படுத்தி உள்ளது.


எனவே விதிமுறைகளுக்குட்பட்டு, விதிமுறைகளை கடைப்பிடித்து பொது தொகுதி, மழைவாழ் மக்கள், பிற்ப்படுத்த மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், பெண்களுக்கு எவ்வளவு இடங்களை ஒதுக்குவது குறித்து சம்பந்தப்பட்டவர்களை அழைத்து பேசி முதல்-அமைச்சர் ரங்கசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுவை அரசு அதிகாரிகள் விதிமுறைகளை பின்பற்றி செயல்படுகிறார்களா? என்பதை தட்டிக்கேட்கும் உரிமை அரசுக்கு உண்டு. அதனை முதல்-அமைச்சர் ரங்கசாமி செய்ய தவறிவிட்டார். இனியாவது விதிமுறைப்படி நடவடிக்கை எடுத்து தேர்தலை நடத்த வேண்டும். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.


உத்தரப்பிரதேசத்தில் பிரியங்கா காந்தி கைது - புதுச்சேரியில் சாலை மறியலில் ஈடுபட்ட நாராயணசாமி கைது