இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின்போது பாகிஸ்தானுக்கு சென்ற முஸ்லிம்களுக்கு மரியாதையே இல்லை என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.


வீர் சவர்கர்: பிரிவினையைத் தடுத்திருக்க்கூடிய நபர் (Veer Savarkar: The Man Who Could Have Prevented Partition) என்ற புத்தக வெளியீட்டு விழாவில் மோகன் பகவத் இதனைக் கூறியுள்ளார். இந்தப் புத்தகத்தை உதய் மதுர்கர், சிரயு பண்டிட் எழுதியுள்ளனர்.


அவரது பேச்சின் முழு விவரம் வருமாறு:


பிரிவினைக்குப் பின்னர், பாகிஸ்தானுக்குச் சென்ற முஸ்லிம்களுக்கு மரியாதையே இல்லை. ஆனால், இந்தியாவில் ஒரு சுதந்திரமான கலாச்சாரம் இருக்கிறது. இதுதான் நமது பாரம்பரியம். இந்தப் பாரம்பரியம் தான் நம்மை ஒன்றிணைத்து வைத்துள்ளது. இது இந்துத்துவத்தின் கலாச்சாரம். பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக இந்து ராஜாக்களின் காவிக் கொடியும், முஸ்லீம் நவாப்புகளின் பச்சைக் கொடியும் எப்படி கூட்டாக செயல்பட்டன என்பதை சவர்கர் கூறியிருக்கிறார். இந்தியச் சமூகத்தில் பலரும் இந்துத்துவா மற்றும் ஒற்றுமை குறித்து பேசியிருக்கிறார்கள், ஆனால் வீர் சவர்கர் மட்டுமே அவற்றை பலமாக பேசியிருக்கிரார்.


வீர சவர்கர் முஸ்லிம்களின் எதிரி கிடையாது. அவர் உருது மொழியில் நிறைய பாடல்கள், கவிதைகள் (ghazal) எழுதியிருக்கிறார்.
இந்து தேசியவாதம் என்பது இந்தியாவின் ஒற்றுமையை பறைசாற்றுவதாகும். நாட்டில் பல்வேறு மதப் பழக்கவழக்கங்கள் இருந்தாலும் கூட ஒற்றுமையுடன் இருப்பதுதான்.


பிரிட்டிஷ்காரர்களுக்கு இந்தியாவை பிரித்தால் மட்டுமே ஆள முடியும் எனத் தெரிந்திருந்தது. அதனால் அவர்கள் பிரிவினையைத் தூண்டினர். அந்தமான் சிறையில் இருந்து திரும்பிய பின்னர் சவர்கர் இதனைத் தெரிவித்திருந்தார்.
லாகூருக்கு சென்ற சையது அகமது கான் நான் பாரத மாதாவின் மகன் என்றார். இதுதான் பாரதத்தின் உணர்வு. தாரா சிகோவும், அக்பரும் பாரதக் கொள்கையில் இருந்தனர், அவுரங்கஜீப் அதற்கு எதிராக இருந்தார். இதைப் போன்றுதான் பிரிட்டிஷ்காரர்களும் பிரிவினையை தூண்டினர். 


நான் அண்மையில் ஜம்மு காஷ்மீருக்கு சென்றேன். அங்கு சில பள்ளிகளின் பெயர் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. நாம் வழிபடும் தெய்வங்கள் வேண்டுமானால் வேறாக இருக்கலாம் ஆனால் நம் மூதாதையர்கள் இந்துக்கள் தான். நம் தாய் நாட்டை நாம் மாற்றிக் கொள்ள முடியாது. பாகிஸ்தானுக்கு சென்ற முஸ்லிம்களுக்கு மரியாதையே இல்லை. ஏனென்றால் அவர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்.


இவ்வாறு அவர் பேசினார்.


இந்நிகழ்சியில் கலந்து கொண்டு பேசிய மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், 20ம் நூற்றாண்டின் மிகச்சிறந்த ராணுவ நிபுணர் என்று தெரிவித்தார்.


மேலும், வீர் சவர்கர் விடுதலைக்காக கருணை மனுக்களை தாக்கல் செய்யவில்லை என்பதே உண்மை.  காந்தியின் அறிவுறுத்தலின் பேரிலேயே அவர் கருணை மனு அளித்தார் என்றும் தெரிவித்தார்.