நாடாளுமன்றததில் நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31ஆம் தேதி தொடங்கியது. இது, ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரில், பிப்ரவரி 1ஆம் தேதி, மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.


இதில், அதானி விவகாரத்தை முன்வைத்து எதிர்கட்சி உறுப்பினர்கள் சரமாரி கேள்வி எழுப்பி வருகின்றனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, பகுஜன் சமாஜ் கட்சி எம்பி டேனிஷ் அலி ஆகியோர் நேற்று கேள்வி எழுப்பினர்.


இந்நிலையில், இன்று விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு புகழாரம் சூட்டினார். "அவரது தொலைநோக்கு உரையில், எங்களுக்கும் கோடிக்கணக்கான இந்தியர்களுக்கும் குடியரசு தலைவர் வழிகாட்டினார். குடியரசின் தலைவராக அவரது இருப்பு வரலாற்று சிறப்புமிக்கது. நாட்டின் மகள்கள் மற்றும் சகோதரிகளுக்கு ஊக்கமளிக்கிறது.


பழங்குடியின சமூகத்தின் பெருமையை குடியரசு தலைவர் உயர்த்தியுள்ளார். இன்று, சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு, பழங்குடி சமூகத்தில் பெருமை மற்றும் அவர்களின் தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது. இதற்காக இந்த தேசமும் நாடாளுமன்றமும் அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறது" என்றார்.


எதிர்கட்சி உறுப்பினர்களின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்து பேசிய பிரதமர், "நான் நேற்று பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு சிலரின் பேச்சுக்குப் பிறகு, சிலர் மகிழ்ச்சியுடன் பேசிக் கொண்டிருந்தனர். ஒருவேளை அவர்கள் நன்றாக தூங்கியிருக்கலாம். ஆனால், சரியான நேரத்தில் எழுந்திருக்கவில்லை போலும். 


குடியரசு தலைவரின் உரையின் போது, ​​சிலர் அதனைத் தவிர்த்தனர். உயரமான தலைவர் ஒருவர் குடியரசு தலைவரை அவமதித்தார். அவர்கள் பழங்குடியினருக்கு எதிரான வெறுப்பை வெளிப்படுத்துகின்றனர். தொலைக்காட்சியில் இப்படி பேசும்போது, ஆழமாக வேரூன்றி இருக்கும் வெறுப்புணர்வு வெளிபடுகிறது. பின்னர் கடிதம் எழுதிவிட்டு தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முயற்சி செய்யப்பட்டது.


தொற்றுநோய், பிளவுபட்ட உலகம் மற்றும் போர் அழிவு பல நாடுகளில் உறுதியற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளது. பல நாடுகளில் கடுமையான பணவீக்கம், வேலையின்மை, உணவு நெருக்கடி உள்ளது. 


 






இப்படிப்பட்ட காலங்களிலும், உலகின் 5வது பெரிய பொருளாதாரம் என்று எந்த இந்தியன் பெருமைப்படமாட்டான்? 140 கோடியில் யாரும் வருத்தப்பட முடியாது. இதைப் பற்றியும் வருத்தப்படுபவர்கள் யார் என்று சுயபரிசோதனை செய்ய வேண்டும்" என்றார்.