மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வரும் 71வது உலக அழகிப் போட்டி இவ்வருடம் நவம்பர் மாதத்தில் நடைபெறவுள்ளது. இதன் தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்தியாவில் கடைசியாக 1996இல் இப்போட்டி நடைப்பெற்றது. 


இந்நிலையில் ”71வது உலக அழகி இறுதிப் போட்டியின் புதிய வீடாக இந்தியாவை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்... இந்தியாவின் தனித்துவமான மாறுபட்ட கலாச்சாரத்தையும், உலகத் தரம் வாய்ந்த இடங்களையும் உலகின் பிற பகுதிகளுடன் பகிர்ந்து கொள்ள நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்”  என்று மிஸ் வேர்ல்ட் அமைப்பின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜூலியா மோர்லி வியாழக்கிழமை செய்தியாளர் சந்திப்பில் கூறினார். 


ஒரு மாதம் நடைபெறும் மிஸ் வேர்ல்டு போட்டியில் 130 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் கலந்து கொள்வார்கள். இதில் விளையாட்டுத் திறன், தனிச்சிறப்புத் திறன், தொண்டு மனப்பாண்மை எனப் பல விஷயங்கள் பற்றியும் பேசப்படும். தற்போது போலந்து நாட்டின் கரோலினா பிலாஸ்கா மிஸ் வேர்ல்டாக உள்ளார்.


அவர் இது குறித்துக் கூறுகையில் நான் எனது மிஸ் வேர்ல்டு பட்டத்தை இந்தியா போன்ற அழகான நாட்டில் இன்னொரு பெண்ணுக்கு சூட்டுவதில் பெருமை கொள்கிறேன் என்றார்.


மேலும் அவர் கூறுகையில், இந்த உலகிலேயே இந்தியாவில் தான் விருந்தோம்பல் மிகமிக அதிகம். நான் இந்தியா வருவது இது இரண்டாவது முறை. நான் இதை ரசிக்கிறேன். வேற்றுமையில் ஒற்றுமை என்ற கொள்கையில் நீங்கள் நிலைத்திருக்கிறீர்கள். குடும்பம், நம்பிக்கை, அன்பு என உங்களின் பல்வேறு பண்புகளும் இந்த உலகுக்கே ஓர் எடுத்துக்காட்டு. இந்தியாவில் சுற்றிப் பார்ப்பதற்கு நிறைய இடங்கள் உள்ளன. இந்தியாவின் கொள்கைகளும் அப்படித்தான் இங்கே கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. 
இவ்வாறு அவர் கூறினார்.


மிஸ் இந்தியா வேர்டு ஷைனி ஷெட்டி கூறுகையில், இந்தியாவில் மிஸ் வேர்ல்டு போட்டி நடைபெறவிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.  நான் என் தேசத்தின் சகோதரிகளை போட்டியில் சந்திப்பதில் ஆவலாக இருக்கிறேன். இந்தியா என்பது பன்முகத்தன்மையின் அடையாளம். இங்கே உங்கள் அனைவருக்கும் நல்ல மகிழ்வான தருணங்கள் அமையும் என நம்புகிறேன் என்றார்.


பட்டம் வென்ற இந்திய அழகிகள்:
இதுவரை மிஸ் வேர்ல்டு பட்டத்தை இந்தியாவிலிருந்து ரீட்டா ஃபாரியா (1996), ஐஸ்வர்யா ராய் (1994), டயானா ஹேடன் (1997), யுக்தா முகி (1999), பிரியங்கா சோப்ரா (2000) மற்றும் மனுஷ் சில்லார் (2017) என 6 பேர் பெற்றுள்ளனர்.