மீரட் : திருமணத்திற்குப் பிறகு உடல் எடை அதிகரித்ததால், மனைவியை வீட்டை விட்டுத் துரத்திவிட்டு விவாகரத்து கோரி கணவன் மனுத் தாக்கல் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


மீரட் அருகில் நஸ்மா என்ற பெண் திருமணத்திற்குப் பிறகு உடல் எடை அதிகரித்ததால், அவரை வீட்டை விட்டுத் துரத்திவிட்டு விவாகரத்து கோரி கணவன் சல்மான் மனுத் தாக்கல் செய்துள்ளார். மேலும் விவாகரத்து மனு தாக்கல் செய்வதற்கு முன்னதாக தனது உடல் எடை அதிகரித்ததன் காரணமாக தன்னை அடிக்கடி அவமானப்படுத்தி, கொடூரமாக தாக்கியதாகவும் மனைவி நஸ்மா தகவல் தெரிவித்துள்ளார். 




மீரட்டின் ஜாகிர் காலனியில் வசிக்கும் நஸ்மா, ஃபதேபூரில் வசிக்கும் சல்மானை எட்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு 7 வயது மகனும் உள்ளார். கணவர் தன்னை கொழுத்தவர் என்று அழைப்பதாகவும், அவரைப் போன்ற ஒருவருடன் தன்னால் வாழ முடியாது என்றும் நஸ்மா குற்றம் சாட்டினார்.






இதையடுத்து, நஸ்மா நீதி கேட்டு மீரட்டில் உள்ள லிசாரி கேட் காவல் நிலையத்தையும் சென்றடைந்ததாக கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து எந்தவொரு தகவலுக்கு தங்களுக்கு கிடைக்கவில்லை என காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. 


தொடர்ந்து, கோட்வாலி மீரட் வட்ட அதிகாரி (சிஓ) அரவிந்த் சௌராசியா தெரிவிக்கையில், “இதுபோன்ற வழக்கு எதுவும் தனது கவனத்திற்கு வரவில்லை. இது தொடர்பாக புகார் அளித்தால் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்”  என உறுதியளித்தார்.