மணிப்பூர் கலவரம் தொடர்பாக கள ஆய்வு மேற்கொள்ள, ஓய்வு பெற்ற நீதிபதிகள் 3 பேர் கொண்ட குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


உச்சநீதிமன்றம் உத்தரவு:


மணிப்பூரில் மே மாதம் முதல் நடைபெற்று வரும் வன்முறை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் ஆர் வெங்கடரமணி, மணிப்பூரில் உள்ள சூழ்நிலையை அரசு மிகவும் முதிர்ச்சியுடன் கையாண்டு வருவதாக  தெரிவித்தார். தொடர்ந்து, மணிப்பூரில் மறுகுடியமர்த்தும் பணிகளை கண்காணிக்க,  ஓய்வுபெற்ற நீதிபதிகள்  3 பேர் கொண்ட குழுவை அமைத்தது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மூன்று முன்னாள் நீதிபதிகள் கொண்ட குழுவில் நீதிபதி கீதா மிட்டல் தலைமை தாங்க,  நீதிபதி ஷாலினி ஜோஷி மற்றும் நீதிபதி ஆஷா மேனன் ஆகியோரும் இடம் பெறுவார்கள். இந்த குழுவானது மணிப்பூர் வன்முறை தொடர்பான விசாரணை, நிவாரணம், நிவாரண நடவடிக்கைகள், இழப்பீடு மற்றும் மறுவாழ்வு போன்ற உள்ளிட்ட மனிதாபிமான உதவிகள் செய்யப்படுவதை கண்காணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






சிபிஐக்கு உத்தரவு:


”மணிப்பூர் பாலியல் வழக்குகளை விசாரிக்கும் சிபிஐ குழுவில் வேறு மாநிலங்களைச் சேர்ந்த  அதிகாரிகள் இடம்பெற வேண்டும்.  சட்டத்தின் மீது நம்பிக்கையை உறுதிப்படுத்த, குறைந்தபட்சம் துணை எஸ்பி பதவியில் உள்ள ஐந்து அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும். இவர்களுக்கு கூடுதல் அதிகாரம் எதுவும் வழங்கப்படாது. இந்த அதிகாரிகள் சிபிஐயின் உள்கட்டமைப்பு மற்றும் நிர்வாகக் கட்டமைப்பின் உட்பட்டே செயல்படுவார்கள்” எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.


தொடரும் வன்முறை:


மணிப்பூரில் மெய்தி மற்றும் குக்கி இன மக்களிடையே கடந்த மே மாதம் ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியுள்ளது. தீயிட்டு கொளுத்தும் சம்பவங்கள், வன்முறைகள், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, கொலை மற்றும் கொள்ளை போன்ற சம்பவங்க அடுத்தடுத்து நிகழ்ந்து வருகின்றன. பாதுகாப்பிற்காக துணை ராணுவப்படையும் அங்கு குவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தற்போது வரையில் அங்கு இயல்பு நிலை திரும்பவில்லை. இந்நிலையில் தான், மணிப்பூர் கலவரம் தொடர்பாக கள ஆய்வு மேற்கொள்ள, ஓய்வு பெற்ற நீதிபதிகள் 3 பேர் கொண்ட குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.