மணிப்பூரில் கிட்டத்தட்ட 5 மாதங்களுக்கு மேலாக நடந்து வரும் இனக்கலவரம் இந்தியா மட்டும் இன்றி உலக நாடுகளிலும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. பெரும்பான்மை மெய்தி சமூக மக்களுக்கும், பழங்குடி குக்கி சமூக மக்களுக்கும் இடையே நடந்த இனக்கலவரம் நாட்டையே உலுக்கியது.


மணிப்பூர் இனக்கலவரம்:


இந்த இனக்கலவரத்தின் காரணமாக இதுவரை 160 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடுகளை விட்டு வெளியேறி, வெளி இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளன. தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக் கோரி மெய்தி சமூக மக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த மே மாதம் பழங்குடியினர் பேரணி நடத்தினர். இந்த பேரணியில் வன்முறை வெடிக்க, மணிப்பூர் முழுவதும் கலவரம் பற்றி கொண்டது.


மணிப்பூரில் இயல்புநிலை திரும்பிவிட்டதாக மாநில அரசு தொடர்ந்து தெரிவித்து வருகிறது. ஆனால், பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்குவது, மாணவர்களை கடத்தி கொடூரமாக கொலை செய்வது என தினந்தோறும் வன்முறை சம்பவங்கள் அறங்கேறிய வண்ணம் இருக்கிறது. 


இச்சூழலில், இரண்டு மாணவர்கள் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் மணிப்பூரில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஜூலை 6 ஆம் தேதி, பதின் பருவத்தை சேர்ந்த இரண்டு மாணவர்களும் மாயமாகியுள்ளனர். 


கடத்தி, கொலை செய்யப்பட்டனாரா மாணவர்கள்?


ராணுவ முகாம் போல் காட்சி அளிக்கும் இடத்தில், மாயமான இரண்டு மாணவர்களின் உடல்கள் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில அரசு உறுதி அளித்தபோதிலும், மனித உரிமை ஆர்வலர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.


இந்த நிலையில், கொலை செய்ய மாணவர்களின் பெற்றோரின் துயர நிலை அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தங்களுடைய குழந்தைகள் என்ன தவறு செய்தார்கள் என அவர்கள் கேட்கும் கேள்விக்கு மாநில அரசு பதில் அளிக்க முடியாமல் திணறி வருகிறது. 


கொலை செய்யப்பட்ட 17 வயது சிறுவனின் தந்தை ஃபிஜான் இபுங்கோபி தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், "மகன் வீடு திரும்புவான் என்ற நம்பிக்கையில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக தினமும் காலையில் மேஜையில் ஒரு தட்டில் காலை உணவை போட்டு வைத்து காத்துக் கொண்டிருந்தேன். இனி, அந்த மேஜையில் உணவு வைக்க போவதில்லை.


"யாருக்கு, என்ன தீங்கு செய்தார்கள்?"


என் மகனோ, அல்லது இன்னொருவரின் மகளோ (கொலை செய்யப்பட்ட மற்றொரு சிறுமி), ஏதாவது தவறு செய்திருக்கிறார்களா? அவர்கள் யாருக்காவது தீங்கு செய்தார்களா? அவர்கள் பயணம் செய்து கொண்டிருந்தபோது, கடத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர்" என்றார்.


கொலை செய்யப்பட்ட சிறுமியின் தந்தை ஹிஜாம் குல்ஜீத் கூறுகையில், "சைபர் கிரைம் போலீசார் அவரது போன் கடைசியாக குவாக்டாவில் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது என்றும், அவரது நண்பரின் போன் லாம்டானில் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்" என்றார்.


சிறுமியின் தாயார் ஜெயஸ்ரீ விவரிக்கையில், "வெகு நேரமான பின்பும், மகள் திரும்பி வராததால், நான் அவரை போனில் அழைத்தேன். அவள் எடுத்தாள். அவள் பயந்துபோய் நம்போளில் இருப்பதாகச் சொன்னாள். ஏன் நம்போளுக்கு சென்றாய் என்று கேட்டேன். அவரது அப்பாவை அழைத்து செல்வதற்காக அவளுடைய இருப்பிடத்தைச் சொல்லச் சொன்னேன். அவள் கூப்பும் என (நம்போலில் இருந்து 20 கி.மீ.) முணுமுணுத்தாள். பின்னர், அவளுடைய தொலைபேசி அணைக்கப்பட்டது" என்றார்.