வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் நடத்தப்பட்ட பழங்குடியினர் ஒற்றுமை பேரணியில் வன்முறை வெடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பேரணியில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் கலந்துகொண்டனர். அப்போது, பழங்குடியினர் மற்றும் பழங்குடியினர் அல்லாதவர்களுக்கு இடையே மோதல் வெடித்தது.


மணிப்பூரின் அனைத்து பழங்குடி மாணவர் சங்கம் நடத்திய ஒற்றுமை பேரணியில் கலவரம் ஏற்பட்டதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் பதற்றம் நிலவி வருகிறது.


இந்நிலையில், மோசமான நிலைகளில் கண்டவுடன் சுடுவதற்கான உத்தரவை வழங்க மாவட்ட ஆட்சியர், துணை மண்டல ஆட்சியர் ஆகியோருக்கு ஆளுநர் அதிகாரம் வழங்கியுள்ளார். மாநிலத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு சூழலை கருத்தில் கொண்டு பொது ஒழுங்கு மற்றும் அமைதியை நிலைநாட்ட இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


இதுவரை, 9,000 பேர் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டு, தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருவதாக பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் இன்று தெரிவித்தார்.


மணிப்பூரில் என்ன பிரச்னை?


மாநிலத்தின் பழங்குடியினர் பட்டியலில் மெய்டீஸ் சமூகத்தினரை சேர்க்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு முதல், மெய்டீஸ் சமூகத்தினர், இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.


மெய்டீஸ் சமூகத்தினருக்கு எஸ்டி அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கையை மாநிலத்தின் பழங்குடியினர் நீண்ட காலமாக எதிர்க்கின்றனர். மாநிலத்தின் 60 சட்டமன்றத் தொகுதிகளில் 40 தொகுதிகள் பள்ளத்தாக்கில் இருப்பதால், மக்கள்தொகை மற்றும் அரசியல் பிரதிநிதித்துவம் இரண்டிலும் மெய்டீஸ் ஆதிக்கமே இருப்பதாக பழங்குடியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.


இதற்கிடையே, மணிப்பூர் உயர் நீதிமன்றத்தில் மெய்டீஸ் பழங்குடி சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்திய அரசியலமைப்பில் உள்ள பழங்குடியினர் பட்டியலில் மெய்டீஸ் சமூகத்தை சேர்ப்பதற்கான பரிந்துரையை மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சகத்திடம் சமர்ப்பிக்க மணிப்பூர் அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டது.


பழங்குடியினரின் கோரிக்கைதான் என்ன?


"மனுப்பூரில் உள்ள பழங்குடியினர் பட்டியலில் மெய்டீஸ் சமூகத்தை சேர்க்க மனுதாரர்கள் மற்றும் பிற சங்கங்கள் நீண்ட வருடங்களாக போராடி வருகின்றன" என்று கூறிய நீதிமன்றம், மனுதாரர்களின் வழக்கை பரிசீலித்து அதன் பரிந்துரையை சமர்ப்பிக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டது. இந்த விவகாரத்தில் நான்கு வார காலம், அவகாசம் வழங்கியது மணிப்பூர் உயர் நீதிமன்றம்.


உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு, பழங்குடியினர் பிரிவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எஸ்டி அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற மெய்டீஸ் சமூகத்தினரின் நீண்ட நாள் கோரிக்கைக்கு எதிராக பழங்குடியினர் ஒற்றுமை பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணியில் வன்முறை வெடிக்க மாநிலம் முழுவதும் பதற்றம் நிலவியது.


இம்பால், சுராசந்த்பூர் மற்றும் காங்போக்பி ஆகிய இடங்களில் வன்முறை வெடித்ததை அடுத்து மணிப்பூரின் 8 மாவட்டங்களில் நேற்று இரவு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மணிப்பூர் அரசும் மாநிலத்தில் இணைய வசதியை நிறுத்தியது. இதையடுத்து, நிலைமையை கட்டுப்படுத்த ராணுவம் வரவழைக்கப்பட்டது.