மணிப்பூரில் ஓயாத வன்முறை.. ஆயுதம் ஏந்திய குழு நடத்திய தாக்குதல்.. சிஆர்பிஎப் வீரர் படுகொலை!

மணிப்பூரில் பாதுகாப்பு படை வீரர்களுக்கும் குக்கி ஆயுதம் ஏந்திய குழுவினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் சிஆர்பிஎப் வீரர் கொல்லப்பட்டுள்ளார். ஜிரிபாம் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

Continues below advertisement

மணிப்பூர் மாநிலம் ஜிரிபாம் மாவட்டத்தில் பாதுகாப்பு படை வீரர்களுக்கும் குக்கி ஆயுதம் ஏந்திய குழுவினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை (சி.ஆர்.பி.எப்) சேர்ந்த ஒரு வீரர் கொல்லப்பட்டுள்ளார். இரண்டு காவல்துறை அதிகாரிகளுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.

Continues below advertisement

மணிப்பூரில் ஓயாத வன்முறை: ஜிரிபாம் காவல் நிலையத்திலிருந்து 8 கிமீ தொலைவில் உள்ள மோங்பங்கில் காலை 9.30 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்ததாக காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. மத்திய, மாநில கூட்டு காவல் படை மீது ஆயுதம் ஏந்திய குழுவினர் நேற்று இரவு தாக்குதல் நடத்தினர்.

இதையடுத்து, கூட்டு காவல் படை இன்று அதிரடி சோதனையில் இறங்கியது. அப்போது, இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் உயிரிழந்த சி.ஆர்.பி.எப் வீரர் பீகார் மாநிலத்தை சேர்ந்த அஜய் குமார் ஜா என அடையாளம் காணப்பட்டுள்ளது.

படுகாயம் அடைந்த இரண்டு போலீசார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். கடந்த 15 மாதங்களாக மணிப்பூரில் இனக்கலவரம் நடந்து வருகிறது. அதன் மையமாக தற்போது, ஜிரிபாம் மாவட்டம் உருவெடுத்துள்ளது.

இனக்கலவரத்திற்கு காரணம் என்ன? மணிப்பூர் இனக்கலவரமானது இந்தியா முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி வருகிறது. பெரும்பான்மை மெய்தி சமூக மக்களுக்கும் பழங்குடி குக்கி சமூக மக்களுக்கும் இடையே நடந்த இனக்கலவரம் இந்திய வரலாற்றின் மோசமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

இந்த இனக்கலவரத்தின் காரணமாக இதுவரை 180 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடுகளை விட்டு வெளியேறி, வெளி இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளன. தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக் கோரி மெய்தி சமூக மக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 2023ஆம் ஆண்டு, மே மாதம் பழங்குடியினர் பேரணி நடத்தினர். இந்த பேரணியில் வன்முறை வெடிக்க, மணிப்பூர் முழுவதும் கலவரம் பற்றி கொண்டது.

மணிப்பூரில் இயல்பு நிலை திரும்பிவிட்டதாக மாநில அரசு தொடர்ந்து தெரிவித்து வருகிறது. ஆனால், பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்குவது, மாணவர்களை கடத்தி கொடூரமாக கொலை செய்வது என தினந்தோறும் வன்முறை சம்பவங்கள் அறங்கேறிய வண்ணம் இருக்கிறது.

 

Continues below advertisement