Manipur Violence: மணிப்பூரில் மெய்தி இனைத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் கொலை செய்யப்பட்டு கிடக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிகுள்ளாக்கியது.


மீண்டும் பயங்கரம்:


மணிப்பூரில் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக நடந்து வரும் இனக்கலவரம் இந்தியா மட்டும் இன்றி உலக நாடுகளிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. பெரும்பான்மை மெய்தி சமூக மக்களுக்கும், பழங்குடி குக்கி சமூக மக்களுக்கும் இடையே நடந்த இனக்கலவரம் நாட்டையே உலுக்கியது. இந்த இனக்கலவரத்தின்போது, மணிப்பூர் முழுவதும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக நடந்து வரும் வன்முறை சம்பவங்கள் மனித நேயத்தையே கேள்விக்குள்ளாக்கியது. குஜராத் இனக்கலவரத்தை போன்று, அப்பாவி மக்களுக்கு எதிராக வன்முறை சம்பவங்கள் திட்டமிட்டு நடத்தப்படுவதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டினர். இந்நிலையில்,  நேற்று இணையத்தில் வெளியான புகைப்படங்கள் மீண்டும் பதற்றத்தை  அதிகரித்துள்ளது.


உயிரிழந்த இரண்டு மாணவர்கள்:


புகைப்படங்கள் குறித்து காவல்துறையினர் விசாரணையை தொடங்கி உள்ளனர்.  அப்போது, புகைப்படத்தில் சடலமாக கிடந்த இருவரும் மெய்தி இனத்தைச் சேர்ந்த 17,19 வயது மாணவர்கள் எனவும் கடந்த ஜூலை மாதம் இவர்கள் காணாமல் போனவர்கள் என தெரியவந்தது.  கொல்லப்பட்ட மாணவர்களுக்கு பின்னால் துப்பாக்கி ஏந்திய இருவர் இருப்பது போன்று புகைப்படத்தில் உள்ளது. கொலையான மாணவர்களின் சடலங்கள் எங்கு கிடக்கிறது என இடம் தெரியாமல் போலீசார் தேடி வருகின்றனர். இதுகுறித்து விரைவான நடவடிக்கை எடுத்து, உடல்களையும் கண்டறிய வேண்டும் என மணிப்பூர் அரசு உத்தரவிட்டிருக்கிறது.


நாட்டை உலுக்கிய மணிப்பூர் கலவரம்:


மணிப்பூரின் மொத்த மக்கள் தொகையில் மெய்தி சமூக மக்கள், 53 சதவிகிதத்தினர் உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் இம்பால் பள்ளத்தாக்கில் தான் வாழ்ந்து வருகின்றனர். அதேசமயம், குக்கி, நாகா இன மக்கள், மாநிலத்தின் மக்கள் தொகையில் 40 சதவிகிதம் உள்ளனர். இவர்கள், அடிப்படை வசதி கூட இல்லாத மலைப்பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். மே மாதம் வெடித்த இனக்கலவரத்தை காரணமாக இதுவரை 160 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடுகளை விட்டு வெளியேறி, வெளி இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளன. தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக் கோரி மெய்தி சமூக மக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த மே மாதம் பழங்குடியினர் பேரணி நடத்தினர். இந்த பேரணியில் வன்முறை வெடிக்க, மணிப்பூர் முழுவதும் கலவரம் பற்றி கொண்டது.


மணிப்பூர் முழுவதும் வன்முறை பரவுவதற்கு சமூக வலைதளங்களில் பரப்பப்படும் பொய்யான தகவல்களும் வதந்திகளுமே காரணம் என குற்றச்சாட்டு எழுந்த நிலையில், கடந்த மே மாதம் 23ஆம் தேதி, இணைய சேவை முடக்கப்பட்டது. அரசு ஒப்புதல் பெறப்பட்ட மொபைல் எண்களை தவிர்த்து அனைத்து மொபைல்களிலும் இணைய சேவை முடக்கப்பட்டது. 
140 நாட்களாக இணைய சேவை இன்றி மணிப்பூர் மக்கள் தவித்து வந்த நிலையில், கடந்த 23ஆம் தேதி இணைய சேவை வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.