மணிப்பூரில் இணைய சேவையை மீண்டும் தொடங்க அனுமதிக்குமாறு மாநில அரசுக்கு மணிப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பைபர் ஆப்டிக் மற்றும் லீஸ் லைன் இணைய சேவையை தொடங்க அனுமதிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


இரண்டு மாதங்களுக்கு முன்பு, மே 3ஆம் தேதி, மணிப்பூரில் இனக்கலவரம் வெடித்தது. கடந்த 60 நாள்களுக்கு மேலாக நடந்த வன்முறை சம்பவங்கள் நாட்டையே உலுக்கியது. இதற்கிடையே, வன்முறை சம்பவங்களில் இருந்து தங்களை தற்காத்து கொள்ள மெய்தி மற்றும் குகி சமூக மக்கள் தோண்டிய பதுங்கு குழிகளை அரசு மூடி வருகிறது. அதேபோல, கடந்த புதன்கிழமை முதல், 1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. 


சமூக வலைதளங்கள் வழியாக பரவிய பொய் செய்திகள் காரணமாக மணிப்பூர் முழுவதும் வன்முறை சம்பவங்கள் வெடித்தது. இதனால், பரப்பப்படும் பொய்யான தகவல்களை தடுக்கும் நோக்கில் அங்கு இணையம் முடக்கப்பட்டது. இந்த சூழலில், இரண்டு மாதங்களுக்கு பிறகு இணைய சேவை தொடங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  


நாட்டை உலுக்கிய மணிப்பூர் கலவரம்:


மணிப்பூரில் நடந்த வன்முறையில் 120 பேர் உயிரிழந்துள்ளனர். 3,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மாநிலத்தின் பழங்குடியினர் பட்டியலில் மெய்டீஸ் சமூகத்தினரை சேர்க்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு முதல், மெய்டீஸ் சமூகத்தினர், இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.


மெய்டீஸ் சமூகத்தினருக்கு எஸ்டி அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கையை மாநிலத்தின் பழங்குடியினர் நீண்ட காலமாக எதிர்க்கின்றனர். மாநிலத்தின் 60 சட்டமன்றத் தொகுதிகளில் 40 தொகுதிகள் பள்ளத்தாக்கில் இருப்பதால், மக்கள்தொகை மற்றும் அரசியல் பிரதிநிதித்துவம் இரண்டிலும் மெய்டீஸ் ஆதிக்கமே இருப்பதாக பழங்குடியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.


கலவரத்திற்கு காரணம் என்ன?


இதற்கு மத்தியில், மணிப்பூர் உயர் நீதிமன்றத்தில் மெய்டீஸ் பழங்குடி சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்திய அரசியலமைப்பில் உள்ள பழங்குடியினர் பட்டியலில் மெய்டீஸ் சமூகத்தை சேர்ப்பதற்கான பரிந்துரையை மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சகத்திடம் சமர்ப்பிக்க மணிப்பூர் அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டது.


"மனுப்பூரில் உள்ள பழங்குடியினர் பட்டியலில் மெய்டீஸ் சமூகத்தை சேர்க்க மனுதாரர்கள் மற்றும் பிற சங்கங்கள் நீண்ட வருடங்களாக போராடி வருகின்றன" என்று கூறிய நீதிமன்றம், மனுதாரர்களின் வழக்கை பரிசீலித்து அதன் பரிந்துரையை சமர்ப்பிக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டது. இந்த விவகாரத்தில் நான்கு வார காலம், அவகாசம் வழங்கியது மணிப்பூர் உயர் நீதிமன்றம்.


உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு, பழங்குடியினர் பிரிவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எஸ்டி அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற மெய்டீஸ் சமூகத்தினரின் நீண்ட நாள் கோரிக்கைக்கு எதிராக பழங்குடியினர் ஒற்றுமை பேரணி நடத்தினர். இந்த பேரணியில் வெடித்த வன்முறைதான் மாநிலம் முழுவதும் கலவரமாக வெடிக்க காரணமாக மாறியது.