மணிப்பூரில் கிட்டத்தட்ட 5 மாதங்களுக்கு மேலாக நடந்து வரும் இனக்கலவரம் இந்தியா மட்டும் இன்றி உலக நாடுகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பெரும்பான்மை மெய்தி சமூக மக்களுக்கும், பழங்குடி குக்கி சமூக மக்களுக்கும் இடையே நடந்த இனக்கலவரம் நாட்டையே உலுக்கியது.


மணிப்பூர் இனக்கலவரம்:


இந்த இனக்கலவரத்தின் காரணமாக இதுவரை 160 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடுகளை விட்டு வெளியேறி, வெளி இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளன. தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக் கோரி மெய்தி சமூக மக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த மே மாதம் பழங்குடியினர் பேரணி நடத்தினர்.


இந்த பேரணியில் வன்முறை வெடிக்க, மணிப்பூர் முழுவதும் கலவரம் பற்றி கொண்டது. மணிப்பூரில் இயல்புநிலை திரும்பிவிட்டதாக மாநில அரசு தொடர்ந்து தெரிவித்து வருகிறது. ஆனால், பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்குவது, மாணவர்களை கடத்தி கொடூரமாக கொலை செய்வது என தினந்தோறும் வன்முறை சம்பவங்கள் அறங்கேறிய வண்ணம் இருக்கிறது. 


இச்சூழலில், இரண்டு மாணவர்கள் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் மணிப்பூரில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஜூலை 6 ஆம் தேதி, பதின் பருவத்தை சேர்ந்த இரண்டு மாணவர்களும் மாயமாகியுள்ளனர். இந்த சூழலில், ராணுவ முகாம் போல் காட்சி அளிக்கும் இடத்தில், மாயமான இரண்டு மாணவர்களின் உடல்கள் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்த விவகாரத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில அரசு உறுதி அளித்தபோதிலும், மனித உரிமை ஆர்வலர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.


இந்த நிலையில், மணிப்பூரில் நிலவி வரும் சட்டம் ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி, மாநிலம் முழுவதும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை (AFSPA) மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து மணிப்பூர் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு, வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


பள்ளித்தாக்கில் அமைந்துள்ள 19 காவல்நிலையங்களை தவிர்த்து மாநிலத்தில் உள்ள அனைத்து பகுதிகளையும் பதற்றமானவை என மணிப்பூர் அரசு அறிவித்துள்ளது. பல்வேறு தீவிரவாத/கிளர்ச்சிக் குழுக்களின் வன்முறை செயல்களால் முழு மாநிலமும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, அரசு நிர்வாகத்திற்கு உதவ ஆயுதப் படைகளைப் பயன்படுத்துவது தேவையாகிறது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


"மாநிலத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதில் பாதுகாப்புப் படைகள் பயன்படுத்தப்பட்டு வருவதை கருத்தில் கொண்டு களத்தில் நிலைமையை விரிவாக ஆய்வு செய்வது வசதியாகிறது. எனவே, இது போன்ற முக்கியமான விஷயத்தில் ஒரு முடிவை எடுப்பதற்கு முன், 'பதற்றமான பகுதி' என்ற நிலையை திரும்ப பெறுவது பொருத்தமானதல்ல" என மணிப்பூர் அரசு தெரிவித்துள்ளது.