மணிப்பூர் மாநிலம் தீவிரவாதத்தில் இருந்து முழுமையாக விடுபட்டது. அதேபோல் விரைவில் போதையும் மாநிலத்திலிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். அது பாஜகவால் மட்டுமே சாத்தியப்படும் என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.


மணிப்பூர் மாநிலம் மொய்ராங்கில் 12 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் அமித் ஷா. அந்த நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா, மணிப்பூர் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது. மணிப்பூர் தீவிரவாதத்திலிருந்து விடுபட்டுள்ளது. இங்கே முழு அடைப்புப் போராட்டங்கள் ஓய்ந்துள்ளன. அடுத்த தேர்தலுக்குள் நாங்கள் நிச்சயமாக மணிப்பூரை போதையில்லா மாநிலமாக மாற்றுவோம். மணிப்பூரில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் ஆஃப்ஸ்பாவை ஆறு மாவட்டங்களில் நீக்கியுள்ளோம். அது போல் அடுத்த தேர்தலுக்குள் இங்கே போதைப் பொருள் புழக்கத்தை முழுமையாக ஒழிப்போம்.


மொய்ராங்கின் முதல் மருத்துவக் கல்லூரி உட்பட 1300 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களுக்கு அமித் ஷா அடிக்கல் நாட்டினார். மணிப்பூரின் இம்பாலில் 120 அடி உயர போலோ வீரர் சிலையை அமித் ஷா தொடங்கி வைத்தார். மணிப்பூர் தான் போலோ விளையாட்டின் பிறப்பிடமாகக் கருதப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் பைரன் சிங்கும் கலந்து கொண்டார்.


AFSPA சட்டம் என்றால் என்ன?


எளிமையாக விளக்க வேண்டுமென்றால், எந்தப் பகுதியெல்லாம் சர்ச்சைக்குரிய பகுதி என்று அரசால் கண்டறியப்படுகிறதோ, அங்கெல்லாம் ஆயுதப்படையினருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கப்பட்டு பொது அமைதியைக் காக்க உத்தரவிடப்படுகிறது. ஆஃப்ஸ்பா படையினருக்கு சிறப்பு அதிகாரங்கள் தான் கொடுக்கப்பட்டுள்ளது ஆனால் சில இடங்களில் வானளாவிய அதிகாரங்கள் இருப்பதாகக் கருதிக் கொண்டு நிகழ்த்தப்படும் அத்துமீறல்கள் தான் இந்தச் சட்டத்தை டெரர் சட்டமாக மாற்றியிருக்கிறது. ஆஃப்ஸ்பா சட்டத்தைக் கொண்டு 5 பேருக்கு மேல் ஓரிடத்தில் கூடாமல் பார்த்துக் கொள்ள முடியும், ஒரு நபர் சட்டவிரோதமாக நடக்கிறார் என்று கருதினால், சிறு எச்சரிக்கைக்குப் பின்னர் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முடியும். சந்தேகத்தின் பேரில் யாரை வேண்டுமானாலும் எங்கு வைத்தும் எந்த நேரத்திலும் கைது செய்ய முடியும். அவ்வாறு கைது செய்யப்படும் நபர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்படுவார்.


சரி சர்ச்சைக்குரிய பகுதி என்றால் அது எது? யார் அப்படி வரையறுக்கிறார்கள்? 
 
ஆஃப்ஸ்பா (AFSPA) ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரி சட்டத்தின் மூன்றாவது பிரிவின் படி சில இடங்கள் பதற்றம் நிறைந்த சர்ச்சைக்குரிய பகுதியாகக் கருதப்படுகிறது. மத ரீதியாக, இன ரீதியாக, மொழி அல்லது பிராந்திய ரீதியாக, சாதி ரீதியாக சர்ச்சைகளுக்கு உள்ளாகும் வாய்ப்பு கொண்ட பகுதிகள் பதற்றம் நிறைந்த பகுதிகளாகக் கருதப்படுகிறது. மத்திய அரசோ மாநில ஆளுநரோ அல்லது யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநரோ இவ்வாறாக ஏதேனும் ஒரு பகுதியை பதற்றம் நிறைந்த பகுதியாக அறிவிக்க இயலும். இந்தச் சட்டத்தை ஒரு பகுதியில் நடைமுறைக்குக் கொண்டு வரும் அதிகாரம் மத்திய உள்துறைக்கே உள்ளது. 
 
AFSPA பின்னணி என்ன?


வடகிழக்கு மாநிலங்களில் பல்வேறு குழுவினருக்கும் இடையே மோதல்கள் வெடித்தன. இது பெரிய வன்முறைகளாக வெடித்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்துவந்தன. இந்நிலையில் கடந்த 1958-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் இணைந்து ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தை இயற்றியது.


இதுவரை இந்தச் சட்டங்கள் எங்கெல்லாம் அமலில் இருந்துள்ளது?


நாகாலாந்து, அசாம், மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகளில் இந்தச் சட்டம் அமலில் இருந்துள்ளது. ஏப்ரல் 2018-ஆம் ஆண்டில் மேகாலயாவிலிருந்து இச்சட்டம் திரும்பப்பெறப்பட்டது. திரிபுராவில் இந்தச் சட்டம் 2015-ஆம் ஆண்டில் திரும்பப்பெறப்பட்டது. ஜம்மு காஷ்மீரிலும் இதுபோன்றதொரு சட்டம் இருக்கிறது.