நியாயமற்ற முறையில் வணிகம் செய்ததற்காக அமேசான் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ட்விட்டர் பயனர் ஒருவர் கோரிக்கை விடுத்திருந்தார். இருப்பினும், நுகர்வோர் விவகார அமைச்சகத்தைக் டேக் செய்வதற்கு பதிலாக, அவர் தற்செயலாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தைச் சேர்த்து ட்வீட் செய்துள்ளார். பயனரின் இந்த ட்வீட்டுக்கு வேடிக்கையான பதிலை அமைச்சகம் தந்துள்ளது.






அமேசான் இணையபக்கத்தில் ஐபாட் ப்ரோவின் ஸ்கிரீன்ஷாட்டை அங்கூர் சர்மா என்ற பயனர் வெளியிட்டிருந்தார். 1,76,900 ரூபாய் ஆரம்ப விலையில் இருந்த ஐபாட் ப்ரோ, பெரிய தள்ளுபடிக்குப் பிறகு 67,390 ரூபாய்க்கு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.


ஐபாட் ப்ரோவின் விலையை மிகைப்படுத்தி 62% தள்ளுபடியில் விற்பதாக அமேசான் விளம்பரம் செய்துள்ளதாகவும் அதன் உண்மையான விலையே 1,76,900 ரூபாய் இல்லை என்றும் அவர் புகார் தெரிவித்துள்ளார். "ஐபாட் ப்ரோ 11 இன்ச், எப்போதும் 1,76,900 ரூபாயாக இருந்ததில்லை. நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளுக்கு எதிராக விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் ட்வீட் செய்தார். 


அதில், நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகத்தை டேக் செய்வதற்கு பதில் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கை டேக் செய்துள்ளார். சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் எதிர்பாராத விதமாக இந்த ட்வீட்டிற்கு பதிலளித்தது.


உதவ இயலாமைக்கு மன்னிப்பு கோரிய அமைச்சகம், "நாங்கள் உதவ விரும்புகிறோம். ஆனால், இந்தியாவிற்கு குறைவான விலையில் விமானப் பயணத்தை வழங்குவதில் நாங்கள் மும்முரமாக இருக்கிறோம்" என ட்வீட் செய்தது.


அமைச்சகத்தின் நகைச்சுவையான பதிலை 7,500 க்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். 700 க்கும் மேற்பட்டோர் ரீட்வீட் செய்துள்ளனர். அமைச்சகத்தின் பதிவை தொடர்ந்து, அமேசான் அந்த வாடிக்கையாளருக்கு பதிலளித்துள்ளது. அவரது புகார் தொடர்பான கூடுதல் தகவல்களைக் கேட்டு ட்வீட் செய்துள்ளது.


இருப்பினும், சில இணையவாசிகள், இந்த சம்பவத்தைப் பற்றி நகைச்சுவையுடன் கருத்து பதிவிட்டுள்ளனர். குறைந்த விலையில் விமான சேவை வழங்குவதாக அமைச்சகம் தெரிவித்ததற்கு பதிலளித்துள்ள பயனர் ஒருவர், "குறைவான விலையும் இந்தியாவில் விமான சேவையும் சொல் முரண் ஆகும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.


 






"மும்பையில் இருந்து தாய்லாந்து செல்வதை விட இந்தியாவில் உள்நாட்டு விமானப் பயணம் மேற்கொள்வதற்கு அதிக செலவாகும்" என மற்றொருவர் கருத்து தெரிவித்துள்ளார்.