டெல்லியில் இருந்து சென்னை வந்த விமானத்தில் சக பெண் பயணிக்கு பாலியல் தொல்லை அளித்த நபரை விமான நிலையத்தில் அதிகாரிகள் கைது செய்தனர்.


சமீப காலமாக, விமானத்தில் தொடர்ந்து சர்ச்சை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. ஏர் இந்தியா விமானத்தில் வயதான பெண் பயணி மீது சக பயணி ஒருவர், சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் பிரச்னையாக மாறி, விமான நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கும் அளவுக்கு சென்றது. இந்த சம்பவத்தின் காரணமாக ஏற்பட்ட பரபரப்பு அடங்குவதற்கு முன்பாக விமான பணிப்பெண்ணிடம் பயணி ஒருவர் அத்துமீறிய சம்பவம் பெரும் பிரச்னையாக வெடித்தது.


விமானத்தில் தொடர் சர்ச்சை:


இந்த நிலையில், டெல்லியில் இருந்து சென்னை நோக்கி வந்த இண்டிகோ விமானத்தில் சக பெண் பயணிக்கு ஒரு நபர் பாலியல் தொல்லை அளித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கிய உடனே குற்றம்சாட்டப்பட்ட நபரை அதிகாரிகள் கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


குற்றம் சாட்டப்பட்டவர், 45 வயதான ராஜேஷ் ஷர்மா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர், மார்பிள் டைல் தொழில் செய்து வருகிறார். கடந்த அக்டோபர் 9ஆம் தேதி, சென்னை விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதும் அவர் கைது செய்யப்பட்டார்.


நடந்தது என்ன?


இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "பாதிக்கப்பட்ட பெண் ஜெய்ப்பூர், டெல்லிக்கு பயணம் செய்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அவளுக்குப் பின்னால் அமர்ந்திருந்த குற்றம் சாட்டப்பட்டவர், பயணத்தின் போது தகாத முறையில் அவரை தொட்டதாகக் கூறப்படுகிறது. உள்ளூர் போலீசாரிடம் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்ததை அடுத்து, விசாரணை நடந்து வருகிறது" என்றார்.


இந்த சம்பவம் குறித்து இண்டிகோ ஏர்லைன்ஸ் இன்னும் அதிகாரப்பூர்வ எதுவும் கூறவில்லை. சமீபத்தில், பயணி ஒருவர், விமான பணிப்பெண் மற்றும் சக பயணியின் அந்தரங்க புகைப்படத்தை எடுக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. டெல்லியில் இருந்து மும்பைக்கு சென்ற விமானத்தில்தான் இந்த சம்பவம் நடந்தது.


இதையும் படிக்க: TN Rains: மக்களே அலர்ட்! தமிழ்நாட்டில் ஒரு வாரத்திற்கு கனமழை, மிக கனமழைதான் - முழு விவரம்