உத்தரப் பிரதேசம் மாநிலம் கான்பூரில் உள்ள ஐஐடியில் 28 வயது பிஎச்டி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரே ஆண்டில் ஐஐடியில் படிக்கும் 4 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.


மாணவர்களின் உயிரை காவு வாங்கும் ஐஐடி:


நாட்டின் தலைசிறந்த கல்வி நிலைங்களாக திகழும் ஐஐடியில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர் கதையாகி வருகிறது. சாதியின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவதாக ஐஐடி மீது தொடர் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வருகிறது.


அதன் தொடர்ச்சியாக ஐஐடி கான்பூரில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. பிஎச்டி படிப்பு படித்து வரும் மாணவி, தன்னுடைய விடுதி அறையில் தூக்கி மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். கான்பூரில் உள்ள சனிகவான் பகுதியைச் சேர்ந்தவர் பிரகதி கர்யா.


புவி அறிவியலில் முனைவர் பட்டம் பெறுவதற்காக படித்து வருகிறார். நான்காவது ஹாலில் உள்ள D-116 என்ற தன்னுடைய ஹாஸ்டல் அறைக்குள் நேற்று முன்தினம் இரவு தற்கொலை செய்து கொண்டார். ஆனால், இந்த விஷயம் வியாழன் மதியம்தான் வெளிச்சத்திற்கு வந்தது.


என்னதான் நடக்கிறது?


மாணவியின் விடுதி தோழர்கள் ஐஐடி நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அவர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதுகுறித்து கான்பூர் ஐஐடி நிர்வாகம் சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், "ஆழ்ந்த துக்கத்துடன் பிரகதி கர்யாவின் துயரமான, அகால மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறோம்.


கடந்த 2021ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம், பிரகதி கார்யா, PhD படிப்பில் சேர்ந்தார். காவல்துறை தடயவியல் குழு மரணம் குறித்து விசாரிக்க வளாகத்திற்குச் சென்றுள்ளது. காவல்துறையின் விசாரணை முடிவுகளுக்காக ஐஐடி நிர்வாகம் காத்திருக்கிறது.


பிரகதி கர்யாவின் மறைவால், இந்த நிறுவனம் ஒரு நம்பிக்கைக்குரிய இளம் ஆராய்ச்சியாளரை இழந்துவிட்டது. நிறுவனம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. இந்த பெரும் இழப்பின் போது அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் வலிமையுடன் இருக்க ஆறுதல் கூறுகிறோம்" என குறிப்பிட்டுள்ளது.


இதுகுறித்து கல்யாண்பூர் காவல் உதவி ஆணையர் அபிஷேக் பாண்டே கூறுகையில், "தற்கொலை பற்றிய தகவல் கிடைத்ததும் அங்கு விரைந்த போலீசார், பிரகதியின் அறையின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததைக் கண்டனர்.


கதவை உடைத்து பார்த்தபோது, ​​மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண் பிணமாக கிடந்தார். தன்னுடைய தற்கொலை முடிவுக்கு யாரும் காரணமில்லை என அவர் தற்கொலைக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இது, அறையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது" என்றார்.



மனநல பிரச்னைகளை மருந்து மற்றும் சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம். இதற்காக நீங்கள் ஒரு மனநல மருத்துவரின் உதவியைப் பெற வேண்டும். மேலும் இந்த உதவி எண்களையும் நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.





  • சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 24640050 (24 மணிநேர சேவை)

  • மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (224 மணிநேர சேவை)