கடந்த ஜூலை 21ஆம் தேதி, டெல்லியில் நாடாளுமன்றம் அமைந்துள்ள சாலையில் ஒரி பெரிய போராட்டம் நடத்தப்பட்டது. அந்த போராட்டத்தை முன்னின்று நடத்தியவர் மல்லிகார்ஜுன கார்கே. அந்த நாள்தான் அவரின் பிறந்தநாள் கூட.


நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை இயக்குநரகம் சம்மன் அனுப்பி இருந்தது. தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களை எல்லாம் தள்ளிவைத்துவிட்டு, அதற்கு எதிராக போராட்டத்தை ஒருங்கிணைத்தார் கார்கே. கட்சியின் தலைவர்கள் மற்றும் தொண்டர்களை எல்லாம் ஒருங்கிணைத்து மாபெரும் போராட்டத்தை நடத்தி காண்பித்தார் கார்கே.


80 வயதிலும், தனது அரசியல் திறனை வெளிப்படுத்தியது காங்கிரஸ் தலைவர் பதவிக்கு கார்கே எவ்வளவு பொருத்தமானவர் என்பதையே வெளி காட்டுகிறது. சமரசமற்ற அணுகுமுறையும் சாமர்த்தியமும் காங்கிரஸை புத்துயிர் பெற வைக்கும் நம்பிக்கையை தந்துள்ளது.


கார்கேவின் அரசியலும் போராட்டமும் மற்ற தலைவர்களுக்கு ஒரு பாடமாகவே மாறியுள்ளது. காங்கிரஸ் தலைவராகவும், நிர்வாகியாகவும், மக்கள் பிரதிநிதியாகவும் அரை நூற்றாண்டுக்கும் மேலான கார்கேவின் அரசியல் வாழ்க்கை பல பாடங்களை மற்ற இளம் தலைவர்களுக்கு கற்று கொடுத்துள்ளது.


பெரும்பாலான காங்கிரஸ் தலைவர்கள், தங்களின் ஆதரவை கார்கேவுக்கே தெரிவித்துள்ளனர். 137 ஆண்டு வரலாறு கொண்ட காங்கிரஸில், தற்போது நிர்வாக ரீதியாகவும் சரி கட்சி ரீதியாகவும் கார்கேவுக்கு நிகரான அனுபவம் வேறு யாருக்கும் கிடையாது.


கார்கே கிட்டத்தட்ட மூன்று முறை கர்நாடகாவின் முதலமைச்சராகும் வாய்ப்பு வந்தது. ஆனால், ஒரு முறைகூட அவரால் முதலமைச்சராக முடியவில்லை. ஒவ்வொரு முறையும் அவர் வாய்ப்பை நழுவவிட்டாலும், ஒரு முறை கூட காங்கிரஸ் தலைமைக்கு எதிராக அவர் கிளர்ந்தெழவில்லை. தனது அதிருப்தியை வெளிகாட்டுகொள்ளவில்லை.


இந்த அனைத்து பண்புகளும்தான், அவரை காங்கிரஸ் தலைவர் பதவிக்கான வேட்பாளராக ஆக்கியது. பல்வேறு மாநில காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் அவருக்கு ஆதரவு தெரிவித்திருக்கும் நிலையில், அவர் தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.


கடந்து வந்த பாதை


கார்கே 1969 இல் தனது சொந்த ஊரான குல்பர்கா நகர காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்ட காலத்திலிருந்து மாநில அரசியலில் பல்வேறு பதவிகளை வகித்து வந்துள்ளார். 1972 இல் அவர் முதல் முறையாக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டபோது தேர்தல் அரசியலில் நுழைந்தார். அப்போது முதல் வெற்றியை பதிவு செய்த அவர் அதற்கு பின்னரும் தொடர்ந்து எட்டு முறை வெற்றிபெற்று சாதனை படைத்தார். 1976ஆம் ஆண்டு தேவராஜ் அரசில் முதல் முறையாக அமைச்சரானார்.


1970களின் பிற்பகுதியில் இந்திரா காந்தியுடனான மோதலுக்குப் பிறகு தேவராஜ் கட்சியை விட்டு வெளியேறி காங்கிரஸை (யு) என்ற கட்சியை தொடங்கினார். தேவராஜ் மீதான பற்றால் அவரின் கட்சியில் கார்கே இணைந்தாலும், 1980 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு அவர் காங்கிரஸுக்குத் திரும்பினார். 


1980இல் குண்டுராவ் அமைச்சரவையிலும், 1990ல் எஸ் பங்காரப்பா அமைச்சரவையிலும் 1992 முதல் 1994 வரை எம் வீரப்ப மொய்லி ஆட்சியிலும் அவர் அமைச்சராக இருந்தார். 1996-99ல் எதிர்க்கட்சித் தலைவராகவும் மற்றும் 2008-09, மற்றும் 2005-08 முதல் மாநில காங்கிரஸ் தலைவராகவும் இருந்துள்ளார். 
தேசிய அரசியலுக்கு செல்வதற்கு முன்பு 2009 இல், அவர் முதல் முறையாக மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டார்.


மன்மோகன் சிங் அமைச்சரவையில் தொழிலாளர்த்துறை அமைச்சராகவும், பின்னர் ரயில்வே மற்றும் சமூக நீதி மற்றும் மேம்பாட்டத்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்தார்.


2014இல் காங்கிரஸ் மோசமான தோல்வியைச் சந்தித்த பிறகு மக்களவையில் அவர்களின் பலம் 44ஆக குறைந்தது. அப்போதுதான், கார்கேவுக்கு மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்தது. குல்பர்கா தொகுதியில் 2வது முறையாக வெற்றி பெற்ற கார்கே, மக்களவையில் காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 


அப்போது, மகாபாரதத்தை மேற்கோள் காட்டி பேசிய அவர், "நாங்கள் மக்களவையில் 44 பேராக இருக்கலாம், ஆனால் நூறு கௌரவர்களால் பாண்டவர்கள் ஒருபோதும் பயப்பட மாட்டார்கள்" என்றார். 


2019 ஆம் ஆண்டில், தேர்தல் வாழ்க்கையில் முதல்முறையாக, கார்கே தோல்வியை சந்தித்தார். ​​இதையடுத்து, கட்சி அவரை மாநிலங்களவைக்கு அனுப்பியது. மேலும், பிப்ரவரி 2021 இல் அவரை மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவராக்கியது.