மகாராஷ்டிராவில் காங்கிரஸ், சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணியாக ஆட்சி அமைத்துள்ளது. இந்நிலையில் சிவசேனாவிலிருந்து ஏக்நாத் சிண்டே உள்ளிட்ட 38 எம்.எல்.ஏக்கள் ஆதரவை வாபஸ் பெற்றுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். இதனால் மகாராஷ்டிராவில் சிவசேனாவின் ஆட்சி கவிழும் சூழல் உருவாகியுள்ளது. 


 


மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் 288 சட்டப்பேரவை இடங்கள் உள்ளன. 2019ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 106 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. சிவசேனா 56 இடங்களில் வெற்றி பெற்றது. தேசியவாத காங்கிரஸ் 52 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 44 இடங்களில் வெற்றி பெற்றது. சுயேட்சை உள்ளிட்ட மற்றவைகள் 27 இடங்களில் வெற்றி பெற்றது. பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவைப்பட்டது. சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து 152 சீட்டுகளுடன் ஆட்சி அமைத்தன.


 






மகாராஷ்டிரா முதலமைச்சராக சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே தேர்வு செய்யப்பட்டார். அதன்பின்னர் இரண்டரை ஆண்டுகள் தற்போது முடிவடைந்துள்ள சூழலில் சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் சிண்டே தன்னுடைய அதிருப்தியை பதிவு செய்திருந்தார். அத்துடன் அவருக்கு ஆதரவாக 15 பேரும் உள்ளதாக தெரிவித்து வந்தார். 


இந்தச் சூழலில் இவர்கள் 16 பேரையும் தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக துணை சபாநாயகர் ஒரு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அந்த நோட்டீஸிற்கு இன்று அவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நோட்டீஸை எதிர்த்து ஏக்நாத் சிண்டே உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அந்த வழக்கு விசாரணையில் ஏக்நாத் சிண்டே உள்ளிட்ட 38 எம்.எல்.ஏக்கள் உத்தவ் தாக்கரே அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கி கொள்வதாக தெரிவித்துள்ளனர். இதன்காரணமாக மகாராஷ்டிராவில் மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. அங்கு ஆட்சியமைக்க உரிய பலம் யாருக்கும் இல்லாத நிலை உருவாகினால் மீண்டும் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும் என்று கருதப்படுகிறது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண