பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடு குறித்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள பரிந்துரைகளை ரத்து செய்துள்ளது உச்ச நீதிமன்றம். நீட் தேர்வில் அனைத்து இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்படாமல் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட போது, அதனை நீதிமன்ற அவமதிப்பு என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியது மனுதாரரான திமுக. 


சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கில் மத்திய அரசு நீட் தேர்வின் அனைத்து இந்திய ஒதுக்கீட்டில் உடனடியாக இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவிகித இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் எனவும், பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடு அமல்படுத்துவதை உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு முடிவு செய்யும் எனவும் உத்தரவிட்டது.



இந்த உத்தரவு குறித்து இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது. நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு, சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை விசாரித்த போது, அதனைத் தேவையற்றது எனக் கூறியுள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் நீட் தேர்வின் அனைத்து இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு குறித்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்கொண்டிருந்த போது, அதனின் நிர்வாக எல்லைக்கு அப்பாற்பட்ட பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடு குறித்து கருத்து தெரிவித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று இந்த அமர்வு குறிப்பிட்டுள்ளது. இதன்மூலம் சென்னை உயர் நீதிமன்றம் தவறிழைத்துள்ளதாகவும் உச்ச நீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது.


சென்னை உயர் நீதிமன்றம் பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடு குறித்து கருத்து தெரிவித்திருந்ததை எதிர்த்து, மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த சிறப்பு மனுவின் மீது இந்த விசாரணை நடைபெற்றது. எனினும், திமுக சார்பாக வாதாடிய வழக்கறிஞர்கள் கபில் சிபல், வில்சன் ஆகியோர் உயர் நீதிமன்றம் பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடு குறித்த 103வது சட்டதிருத்தம், உச்ச நீதிமன்றத்தில் ஐவர் அமர்வினால் கண்காணிக்கப்படுவதைச் சுட்டிக் காட்டியுள்ளனர்.



உச்ச நீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு நீதிமன்ற அவமதிப்பு என்ற வழக்கின் எல்லையை மீறியுள்ளதால், அதனை ரத்து செய்துள்ளதோடு, நீட் தேர்வின் அனைத்து இந்திய ஒதுக்கீட்டில் பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்படுவதன் நன்மைகள் குறித்து பேசப்போவதில்லை எனவும், அது மற்றொரு மனுவின் விசாரணையில் விவாதிக்கப்படும் எனவும் குறிப்பிட்டது. 


நீட் தேர்வின் அனைத்து இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவிகித இட ஒதுக்கீடு, பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடு ஆகியவற்றை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை வரும் அக்டோபர் 7 அன்று விசாரிப்பதாகவும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.