Rajgarh Road Accident: மத்தியபிரதேச மாநிலத்தில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் 13 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  ராஜ்கரில் திருமணத்திற்காக சென்ற டிராக்டர் கவிழ்ந்ததில் பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து ராஜ்கரின் பிப்லோடி கிராமத்திற்கு அருகே நடந்ததாக கூறப்படுகிறது.


13 பேர் பலியான சோகம்:


ராஜஸ்தானில் இருந்து ராஜ்கர் என்ற இடத்திற்கு டிராக்டரில் பயணிகள் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அருகிலிருந்தவர்கள் தெரிவித்த தகவலின் அடிப்படையில்,  108 உதவியுடன் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். நேரில் பார்த்தவர்களின் கூற்றுப்படி, விபத்து நடந்த உடனேயே டிராக்டருடன் இணைக்கப்பட்ட பயணிகள் அமர்ந்திருந்த பின்புற பகுதி தலைகீழாக கவிழ்ந்தது. பலர் அதற்கு அடியில் சிக்கிக் கொண்டனர். காவல்துறையினரும், பொதுமக்களும் சேர்ந்து காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. இதனிடையே, விபத்துக்கான காரணம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தலைவர்கள் இரங்கல்:


விபத்து தொடர்பாக குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “மத்திய பிரதேசத்தின் ராஜ்கர் மாவட்டத்தில் சாலை விபத்தில் பலர் இறந்த செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.






மத்தியப் பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள பிப்லோடி சாலையில் டிராக்டர் கவிழ்ந்ததில் ராஜஸ்தான் மாநிலம் ஜலாவர் மாவட்டத்தைச் சேர்ந்த 13 பேர் அகால மரணமடைந்த செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. தலைவர் நாராயண் சிங் பன்வாரும், மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பி ராஜ்கர் ஆகியோர் ராஜஸ்தான் அரசாங்கத்துடன் தொடர்பில் உள்ளனர்.  மேலும் ராஜஸ்தான் காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். காயமடைந்தவர்கள்  ராஜ்கரில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது" என தெரிவித்துள்ளார்.