கேட்போர் நெஞ்சை உலுக்கும் சாதிப் படுகொலை சம்பவம் ஒன்று மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. நிமோனியா காய்ச்சலால் உயிரிழந்த தனது பச்சிளம் குழந்தைக்கு இறுதி மரியாதை செய்ய அழைத்த இளம்பெண் ஒருவர், தனது தந்தையால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை தொடர்பாக பெண்ணின் தந்தையையும், சகோதரனையும் காவல்துறை கைது செய்துள்ளனர்.


படுகொலை செய்யப்பட்ட பெண் மத்தியப் பிரதேச மாநிலம் ஷாஜபூர் மாவட்டத்தில் தனது கணவர் மற்றும் கைக்குழந்தையுடன்  வாழ்ந்து வந்தார். கடந்த மாதம், பணி மார்க்கமாக தனது கணவர் சத்தீஸ்கர் மாநிலத் தலைநகர் ராய்ப்பூர் சென்றிருந்த காரணத்தினால், தீபாவளி பண்டிகையைக் கொண்டாட, போபால் மாவட்டத்தில் உள்ள தனது பெரிய சகோதரி வீட்டிற்குச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த தருணத்தில், எதிர்பாராத விதமாக அவரின் கைக்குழந்தை நிமோனியா காய்ச்சலால்  உயரிழந்ததாக அறியப்படுகிறது. 


இதனையடுத்து, சேகோர் மாவட்டத்தில் வசிக்கும் தந்தை மற்றும் சகோதரனை அவரின் சகோதரி உதவிக்கு அழைத்துள்ளார். ஏற்கனவே, வேற்று சாதியைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டதற்காக தீரா பகையுடன் இருந்த வந்திருக்கிறார் அவரின் தந்தை. இருப்பினும், கைக்குழந்தையை அடக்கம் செய்ய முன்வந்தாக தெரிவிக்கப்படுகிறது. 


பின்னர், அங்கிருந்த வனப்பகுதி ஒன்றில் குழந்தையை அடக்கம் செய்ய தந்தை, இளைய மகன், பாதிக்கப்பட்ட பெண்  ஆகிய மூவரும் சென்றுள்ளனர். அங்கு, வைத்து வேற்று சாதியில் திருமணம் செய்துகொண்டது தொடர்பான விவாதம் எழுந்திருக்கிறது. ஒருகட்டத்தில் ஆத்திரம் அடைந்த தந்தை,  பாதிக்கப்பட்ட பெண்ணை பலமுறை அடித்து உதைத்து  தாக்கியுள்ளார். சாதி ஆதிக்கவெறி உந்துததால், தான் பெற்ற மகளையே பாலியல் வன்புணர்ச்சி செய்து துன்பப்படுத்தி, கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார். பின்னர், கைக்குழந்தை மற்றும் பாதிக்கப்பட்ட பெண் ஆகிய இருவரையும் அங்குள்ள பகுதியில் அடக்கம் செய்துள்ளார். 


குற்றத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளும் நோக்கில், மகளைக் காணவில்லை என்று அங்குள்ள காவல்துறையினரிடம் போலியான  குற்றச்சாட்டை ஒன்றையும் பதிவு செய்துள்ளார். சம்பவம் நடந்து 10 நாட்களுக்குப் பிறகு, வனத்துறை அதிகாரிகள் இறந்த சடலங்களை மீட்டெடுத்தனர். இதனையடுத்து, காவல்துறை மேற்கொண்ட அதிரடி விசாரணையில் பெண்ணை பாலியல் வன்புணர்ச்சி செய்து கொலை செய்தது அவரின் தந்தை தான் தெரிய வந்தது.