Army Chief  Upendra Dwivedi: இந்திய ராணுவத்தின் தற்போதைய தளபதியான, மனோஜ் பாண்டேவின் பதவிக்காலம் வரும் 30ம் தேதியுடன் நிறைவடைகிறது. 


புதிய ராணுவ தளபதி நியமனம்:


ராணுவத்தின் துணைத் தலைவராகப் பணியாற்றி வரும் லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திரா திவேதியை, அடுத்த ராணுவத் தளபதியாக நியமித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தற்போதைய ராணுவத் தளபதியான ஜெனரல் மனோஜ் சி பாண்டே வரும் ஜுன் 30ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். அதே நாளில் லெப்டினன்ட் ஜெனரல் திவிவேதி புதிய ராணுவத் தளபதியாக பொறுப்பேற்கிறார். ஜூலை 1, 1964 இல் பிறந்த திவேதி, டிசம்பர் 1984 இல் ராணுவத்தின் காலாட்படையில் (ஜம்மு & காஷ்மீர் ரைபிள்ஸ்) நியமிக்கப்பட்டார்.


யார் இந்த உபேந்திர திவேதி?


அரசு வெளியிட்டுள்ள நியமன அறிக்கையில், ”கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் நீடித்த அவரது நீண்ட மற்றும் புகழ்பெற்ற சேவையில், பல்வேறு கட்டளை, பணியாளர்கள், பயிற்றுவிப்பு மற்றும் வெளிநாட்டு நியமனங்களில் பணியாற்றியுள்ளார். லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திரா திவேதியின் கட்டளை நியமனங்களில் ரெஜிமென்ட் (18 ஜம்மு & காஷ்மீர் ரைபிள்ஸ்), பிரிகேட் (26 பிரிவு அசாம் ரைபிள்ஸ்), டிஐஜி, அசாம் ரைபிள்ஸ் (கிழக்கு) மற்றும் 9 கார்ப்ஸ் ஆகியவை அடங்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


லெப்டினன்ட் ஜெனரல் திவேதி, ராணுவப் பணியாளர்களின் துணைத் தலைவராக நியமிக்கப்படுவதற்கு முன், டைரக்டர் ஜெனரல் காலாட்படை மற்றும் 2022-2024 வரையிலான வடக்குக் கட்டளைத் தலைமையகத்தின் தலைமைப் பொது அதிகாரி உள்ளிட்ட முக்கியமான பதவிகளை வகித்துள்ளார்.


கல்வித் தகுதி:


உபேந்திரா சைனிக் பள்ளி ரேவா, தேசிய பாதுகாப்புக் கல்லூரி மற்றும் அமெரிக்க ராணுவப் போர்க் கல்லூரி ஆகியவற்றின் முன்னாள் மாணவர் ஆவார்.  DSSC வெலிங்டன் மற்றும் ராணுவப் போர் கல்லூரி, Mhow ஆகியவற்றிலும் படிப்புகளைப் படித்துள்ளார்.


யு.எஸ்.ஏ.டபிள்யூ.சி, கார்லிசில், யு.எஸ்., என்.டி.சி.க்கு இணையான படிப்பில், திவிவேதிக்கு 'டிஸ்டிங்விஷ்ட் ஃபெலோ' விருது வழங்கப்பட்டது. அவர் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை ஆய்வுகளில் எம்-பில் பட்டமும், வியூக ஆய்வுகள் மற்றும் ராணுவ அறிவியலில் இரண்டு முதுகலைப் பட்டங்களும் பெற்றுள்ளார்.


நீட்டிக்கப்பட்ட பதவிக்காலம்:


இந்த ஆண்டு மே மாதம், அமைச்சரவையின் நியமனக் குழு, ஒரு அரிய நடவடிக்கையாக, ஓய்வுபெறும் ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டேவுக்கு ஒரு மாத கால பணி நீட்டிப்பை வழங்கியது. ஜெனரல் பாண்டே மே 31 அன்று 62 வயதை அடையும் போது ஓய்வு பெறவிருந்தார், ஆனால் அவரது பதவிக்காலம் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டது. பொதுவாக, ராணுவத் தளபதிகளின் தலைவர்களின் பதவிக்காலம் 62 வயது அல்லது மூன்று ஆண்டுகள் எது முந்தையதோ அதில் முடிவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.