Lok Sabha Speaker Election: மக்களவை சபாநாயகர் பதவிக்கான தேர்தலில், பாஜக கூட்டணி சார்பில் ஓம் பிர்லாவும், எதிர்க்கட்சிகளின் சார்பில் கொடிக்குன்னில் சுரேஷும் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளனர்.


மக்களவை சபாநாயகர் தேர்தல்:


மக்களவை சபாநாயகர் பதவிக்கான அரிய தேர்தலை நாடாளுமன்றம் இன்று நடத்தவுள்ளது. ஒருமனதாக சபாநாயகரை தேர்வு செய்வது தொடர்பாக அரசு மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதன் காரணமாக 17வது லோக்சபாவில் சபாநாயகராக இருந்த ஓம் பிர்லாவை, பாஜக கூட்டணி மீண்டும் வேட்பாளராக களமிறக்கியுள்ளது. எதிக்கட்சிகள் அடங்கிய I.N.D.I.A. கூட்டணி  8வது முறையாக எம்.பி., ஆக தேர்வு செய்யப்பட்டுள்ள கொடிக்குன்னில் சுரேஷை வேட்பாளராக நிறுத்திள்ளன. அதனை தொடர்ந்து சுதந்திர வரலாற்றில் மூன்றாவது முறையாக, மக்களவை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெற உள்ளது.


பிடிகொடுக்காத பாஜக..!


மக்களவை சபாநாயகரை பொறுத்தவரை, பெரும்பாலான சூழல்களில் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சிகளும் இணைந்து ஒருமனதாகவே தேர்வு செய்து உள்ளன. அதே மரபை இந்த முறையும் தொடர மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு விரும்பியது. இதற்காக எதிர்க்கட்சிகளின் ஆதரவை பெறுவதற்கான நடவடிக்கைகளை, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மேற்கொண்டார். அதன்படி,  இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டார். அப்போது துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு வழங்க வேண்டும் என காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நிபந்தனை விதித்தன. ஆனால் துணை சபாநாயகர் பதவியில் மத்திய அரசு பிடிகொடுக்கவில்லை. இதன் காரணமாகவே எதிர்க்கட்சிகளும் வேட்பாளரை களமிறக்கியுள்ளன.


வெற்றி யாருக்கு?


வேட்புமனுதாக்கல் நிறைவடைந்ததை தொடர்ந்து இன்று மக்களவை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது. 543 உறுப்பினர் மக்களவையில் ஆளும் பாஜக கூட்டணிக்கு 293 உறுப்பினர்கள் உள்ளதால்,  அவர்களது வேட்பாளர் ஓம் பிர்லா வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் எதிர்ப்பை பதிவு செய்யும் நோக்கில் எதிக்கட்சிகள் வேட்பாளரை களமிறக்கியுள்ளன.


யார் இந்த ஓம் பிர்லா? கொடிக்குன்னில் சுரேஷ்?


ஓம் பிர்லா வெற்றி பெற்றால், கடந்த 25 ஆண்டுகளில் தொடர்ந்து 2 முறை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட பெருமை அவரை சேரும். இவர் ராஜஸ்தானின் கோட்டா தொகுதியில் இருந்து 3-வது முறை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர் ஆவார். இவருக்கு ஆதரவாக  10 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.


மறுபுறம் கேரளாவை சேர்ந்த மூத்த காங்கிரஸ் எம்.பி. கொடிக்குன்னில் சுரேஷிற்கு (வயது 66) ஆதரவாக 3 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவர் 8வது முறையாக மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தலித் பிரிவை சேர்ந்த இவர் கேரளாவின் மாவேலிக்கரை தனித்தொகுதியில்  இருந்து தேர்ந்து எடுக்கப்பட்டவர். திருவனந்தபுரம் கொடிக்குன்னில் பகுதியில் 1962-ம் ஆண்டு பிறந்த சுரேஷ்,  கடந்த 1989-ம் ஆண்டு முதல் நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார்.


மக்களவை சபாநாயகர் தேர்தல்:


மக்களவை சபாநயகர் பதவிக்கு சுதந்திரத்திற்கு முன் பலமுறை தேர்தல் நடந்துள்ளது. ஆனால், சுதந்திர இந்தியாவில் 1952 மற்றும் 1976 என, இரண்டு முறை மட்டுமே தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்நிலையில், சுமார் 48 ஆண்டுகளுக்குப் பிறகு மக்களவை சபாநாயகர் பதவிக்கு இன்று தேர்தல் நடைபெற உள்ளது.