தொடர் தோல்வியை சந்தித்து வந்த காங்கிரஸ் கட்சிக்கு இந்த தேர்தல் திருப்புமுனையாக அமைந்தது. கடந்த 10 ஆண்டுகளாக நாடாளுமன்ற தேர்தல் தொடங்கி சட்டப்பேரவை தேர்தல் வரை பல்வேறு மோசமான தோல்விகளை அக்கட்சி சந்தித்தது.


மீண்டெழுந்த காங்கிரஸ்: இந்த தேர்தலிலும் படுதோல்வியே மிஞ்சும் என கருத்துக்கணிப்புகளில் சொல்லப்பட்டாலும் அதை எல்லாம் பொய்யாக்கி 99 இடங்களை கைப்பற்றியது. கடந்த 2014 மக்களவை தேர்தலில் 44 தொகுதிகளிலும் 2019 மக்களவை  தேர்தலில் 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றது.


ஆனால், எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெற 54 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இதனால், கடந்த 10 ஆண்டுகளாக எதிர்க்கட்சி தலைவர் பதவி யாருக்கும் கொடுக்கப்படாமல் இருந்தது. இச்சூழலில், இந்த தேர்தலில் போதுமான இடங்களில் வெற்றி பெற்றதால் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி கொடுக்கப்படும் என எதிர்பார்ப்பு எழுந்தது.


ஆனால், எதிர்க்கட்சி தலைவராக யார் வருகிறார் என்பதில் தொடர் சஸ்பென்ஸ் நீடித்தது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு பங்காற்றிய ராகுல் காந்திக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும் என அக்கட்சியின் மூத்த தலைவர்கள் விரும்பினர். காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் இதுதொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


எதிர்க்கட்சி தலைவர் பதவியை ஏற்க மறுத்த ராகுல்: ஆனால், கடந்த 2019 தேர்தல் தோல்வியை தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகிய ராகுல் காந்தி, பெரிய பதவிகளை ஏற்பதில் தயக்கம் காட்டி வருகிறார். அந்த வகையில், எதிர்க்கட்சி தலைவர் பதவியையும் ஏற்க மறுத்து வந்தார்.


இருப்பினும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, தற்போது தலைவராக உள்ள மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக தகவல்கள் வெளியாகின.


இந்த நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தியை தேர்வு செய்துள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் அறிவித்துள்ளார்.