கிட்டத்தட்ட 100 ஆண்டுகால அயோத்தி சர்ச்சை கடந்த 2019ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. சர்ச்சைக்குரிய இடம் இந்து தரப்பினருக்கு சொந்தம் என்றும் அங்கு அயோத்தி கோயில் கட்டவும் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இச்சூழலில், அயோத்தி கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில், வரும் ஜனவரி மாதம் 22ஆம் தேதி கோயில் திறக்கப்பட உள்ளது.


பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிய ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவுக்கு 136 சனாதன பாரம்பரியங்களைச் சேர்ந்த 25,000 இந்து மதத் தலைவர்களை அழைக்க அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது. கும்பாபிஷேக விழாவில் 25,000 துறவிகளை தவிர, கூடுதலாக 10,000 சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்வார்கள் எனக் கூறப்படுகிறது.


அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா:


இந்த நிலையில், அயோத்தி ராமர் கோயிலுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி, சிறைக்கு சென்ற அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் திறப்பு விழாவில் கலந்து கொள்ள வேண்டாம் என அறக்கட்டளை சார்பில் கேட்டு கொள்ளப்பட்டனர். இதுகுறித்து ராமர் கோவில் அறக்கட்டளை செயலாளர் சம்பத் ராய் கூறுகையில், "இருவரும் குடும்பத்தில் பெரியவர்கள். வயதைக் கருத்தில் கொண்டு வரவேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதை இருவரும் ஏற்றுக்கொண்டனர்" என்றார்.


இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அயோத்தி ராமர் கோயிலுக்கு ஆதரவு திரட்டுவதற்காக முன்னாள் துணைப் பிரதமரான அத்வானி, குஜராத்தின் சோம்நாத்தில் இருந்து உத்தரபிரதேசத்தின் அயோத்தி வரை ரத யாத்திரையை முன்னின்று நடத்தினார். அவருத்து துணையாக நின்றவர் முரளி மனோகர் ஜோஷி.


அத்வானி, முரளி மனோகர் ஜோஷிக்கு இந்த கதியா?


பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது, அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகிய இருவரும் சம்பவ இடத்தில்தான் இருந்தனர். தற்போது, அரசியலில் இருந்து விலகி வாழ்ந்து வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில், அயோத்தி ராமர் கோயில் போராட்டத்தை முன்னின்று நடத்திய இருவரை திறப்பு விழாவுக்கு வர வேண்டாம் என கேட்டு கொள்ளப்பட்டதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இருவரையும் பாஜக மேலிடம் ஓரங்கட்டியுள்ளதாகவும், அவர்களை அவமானப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. 


இதை தொடர்ந்து, இருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் சர்வதேச செயல் தலைவர் அலோக் குமார், இதுகுறித்து கூறுகையில், "ஜனவரி 22ம் தேதி நடைபெறும் திறப்பு விழாவுக்கு ராம் மந்திர் இயக்கத்தின் தலைவர்களான அத்வானி மற்றும் ஜோஷி ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர். இருவரும் நிகழ்ச்சிக்கு வருவதற்கு தங்களால் இயன்றவரை முயற்சிப்பதாக சொன்னார்கள்" என்றார்.


திறப்பு விழாவுக்கு யார் எல்லாம் அழைக்கப்பட்டார்கள் என்பது குறித்து விவரித்த ராமர் கோவில் அறக்கட்டளை செயலாளர் சம்பத் ராய், " பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பிரமாண்ட விழாவிற்கு ஆறு பழமையான மடங்களைச் சேர்ந்த சங்கராச்சாரியார்கள், சுமார் 4,000 துறவிகள் மற்றும் 2,200 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். விருந்தினர்களில் காசி விஸ்வநாதர் மற்றும் வைஷ்ணோ தேவி போன்ற முக்கிய கோவில்களின் தலைவர்களும் அடங்குவர். மூத்த அரசியல்வாதிகளில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவும் அழைக்கப்பட உள்ளார்" என்றார்.