கன்னட மக்களால் மிகவும் நேசிக்கப்பட்ட மறைந்த திரைப்பட நடிகர் புனீத் ராஜ்குமார் காலமானார். 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே தனது கருவிழிகள் உட்பட உடலின் அனைத்து உறுப்புகளையும் தானமாக வழங்க உறுதியளித்து இருந்தார். அதற்கேற்றவாறு, புனித் ராஜ்குமாரின் கண்கள் தானமாக அளிக்கப்பட்டுள்ளது. 


 கன்னட பவர்ஸ்டார் புனீத் ராஜ்குமார் உடல்நல குறைவு காரணமாக இன்று காலை பெங்களூருவில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது . அவருக்கு வயது 46. 


 





புனீத் ராஜ்குமார்: வாழ்க்கை ஒருமுறை தான், எதிகாலம் நிச்சயமற்றது. உண்பது, உறங்குவது எல்லாம் விதியால் தீர்மானிக்கப்படுகிறது.


முன்னதாக, புனீத்தின் உடல் நிலை குறித்து விக்ரம் மருத்துவமனையின் மருத்துவர் ரங்கநாத் நாயக் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த தகவலின்படி, நடிகர் புனீத் குமார் நெஞ்சுவலி காரணமாக இன்று காலை 11.30 மணிக்கு அனுமதிக்கப்பட்டார். அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது. மருத்துவமனைக்குக் கொண்டுவரும்போதே அவரது நிலைமை மோசமாக இருந்ததார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று தெரிவித்திருந்தது


கருவிழிகள் தானம்: 


புனீத் ராஜ்குமார் கன்னட திரையுலகில் கொடிக்கட்டிப் பறந்த ராஜ்குமாரின் (அன்னாவரு) கடைசி புதல்வராவார். 1954-ம் ஆண்டு பெடரா கண்ணப்பா என்ற படத்தில் சினிமாவுக்கு அறிமுகமானவர் ராஜ்குமார். இந்தப் படம் தமிழில் வேடன் கண்ணப்பா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்தப் படத்தில் கண்ணப்பன் வேடமேற்று நடித்த ராஜ்குமார் தனது ஒரு கண்ணை இறைவனுக்கும் கொடுத்துவிடுவது போல் காட்சியமைக்கப்பட்டிருக்கும். மேலும், தனது மறுகண்ணையும் தானமாக கொடுக்கத் தயாராகும் பொழுது, இறைவனே அவன் செயலைத் தடுத்து, "நில்லு கண்ணப்ப' என்று கூறி அருள்புரிவார்.     


இதன் காரணமாக, ராஜ்குமார் தனது மறைவக்குப் பிறகு தனது கருவிழிகளை தானமாக வழங்க முடிவு செய்து, அதன்படியே வழங்கினார். ராஜ்குமாரின் மறைவுக்குப் பிறகு, அவரின்  கோடிக்கணக்கான ரசிகர்களையும் உடல் உறுப்புகளை தானம் செய்ய ஊக்குவிக்க ராஜ்குமார் அறக்கட்டளையை அவரின் புதல்வர்கள் நிறுவினர். 


இந்நிலையில், கடந்த 2010-ஆம் ஆண்டு ராஜ்குமாரின் 83ம் பிறந்தநாள் விழாவில் , "Dr. Rajkumar-The Person Behind The Personality" என்று புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது . இதில், கலந்துகொண்டு பேசிய புனீத் ராஜ்குமார், "மறைவுக்குப் பிறகு கருவிழிகள் உட்பட ஒட்டுமொத்த உடல் உறுப்புகளையும் தானம் அளிக்க ராஜ்குமார் குடும்பத்தினர் உறுதி ஏற்கிறோம்" என்று தெரிவித்தார்.