வரதட்சணை தடுப்புச் சட்டத்தை முழு அளவில் அமல்படுத்தாதது ஏன் என்று கேரள அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது. 2004 முதல் வரதட்சணை தடுப்புச் சட்ட விதிமுறைகளின் கீழ் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையை நீதிமன்றத்திற்கு தெரிவிக்கும்படியும் நீதிபதிகள்  எஸ்.மணிகுமார், நீதிபதி ஷாஜி பி சாலி உத்தரவிட்டனர்.

  

வரதட்சணை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கோரி விக்ரம் சாரா பாய் அறிவியல் பவுண்டேஷன் தலைமைச் செயல் அலுவலர் இந்திரா ராஜன், கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். தனது மனுவில் வரதட்சணை தடைச் சட்ட விதிகள் மாநிலத்தில் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை. மணமக்களின் பெற்றோரிடமிருந்து வரதட்சணை கேட்கும் குற்றவாளிகளை சட்டத்தின் முன் கொண்டுவர எந்தவித பயனுள்ள நடவடிக்கைகளும்  எதுவும் எடுக்கப்படவில்லை" என்று குற்றம்சாட்டினார். 

மேலும், கேரளா மணக்கொடுமை தடுப்பு விதிகள், 2004 பிரிவு 3ன் கீழ், பிராந்திய அளவில் வரதட்சணை தடை அதிகாரிகள் நியமிக்கப்படவேண்டும். ஆனால், 2017ம் முதல் வரதட்சணை தடை அதிகாரிகளாக யாரும் நியமிக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினர். அப்போது, குறிக்கிட்ட நீதிபதிகள், வரதட்சணை தடை அதிகாரிகள் ஏன் நியமனம் செய்யவில்லை? என அரசு தரப்பு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினர். அடுத்த, மூன்று வாரத்தில் மாநில அரசு  உரிய பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். 

Kerala Dowry Death | விஸ்மயாவை துன்புறுத்தினேன் என விசாரணையில் ஒப்புக்கொண்ட கிரண்குமார்!

வரதட்சணை தடை சட்டம்:  

இந்தியாவில் வரதட்சணை வாங்குவது மற்றும் கொடுப்பது 1961லிருந்து தடைசெய்யப்பட்டுள்ளது. வரதட்சணை என்றால் கல்யாண சம்பந்தமாக ஒரு மணமகள் வீட்டிற்கும், மணமகன் வீட்டிக்கும் இடையே மற்றொரு தரப்புக்கு பொருளோ அல்லது மதிப்புள்ள சொத்தோ, மறைமுகமாகவோ, நேரிடையாகவோ கொடுப்பதோ அல்லது கொடுப்பதாக ஒத்துக் கொள்வதவோ ஆகும். வரதட்சணை கொடுப்பது 1961 முதல் சட்டப்படி குற்றமாகிறது. பிரிவின் 3-ன் கீழ்,  வரதட்சணை வாங்கினாலே கொடுத்தாலோ. கொடுக்க தூண்டினாலோ அவர்களுக்கு 6 மாத தண்டனை அல்லது 5,000 ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்" என தெரிவிக்கப்படுகிறது.  

வரதட்சணை கேட்பதும் 1961 முதல் சட்டப்படி குற்றமாகிறது. பிரிவின் 4-ன் கீழ், "எந்த நபரேனும் நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ, மணமக்களின் பேற்றோரிடமிருந்து வரதட்சணை வேண்டுமென்று கேட்பவர்களுக்கு இந்தச் சட்டப்படி 6 மாதம் வரை சிறைத் தண்டனையும் ரூபாய் 5,000 வரை அபராதம் அல்லது இரண்டும் வதிக்கப்படும்" என தெரிவிக்கப்படுகிறது. முன்னதாக, கேரளா கொல்லம் மாவட்டம் சாஸ்தம்கோட்டா பகுதியைச் சேர்ந்த விஸ்மயா என்ற பெண் வரதட்சணை கொடுமையால் உயிரிழந்தார். இச்சம்பவம், பெண்கள் மீதான ஒட்டுமொத்த சமூக அணுகுமுறையை கேள்வி கேட்பதாய் அமைந்தது. 

Sl. No.

குற்றச் செயல் 

2016

2017

2018

1

வரதட்சணை மரணங்கள் 

7621

7466

7166

2

குடும்ப வன்முறை 

110378

104551

103272

சட்டங்கள் சரியாக அமல்படுத்தப்படாத காரணத்தினால்  வரதட்சணை மரணங்கள் அதிகரித்தவண்ணம் உள்ளன. 2018-ஆம் வருடத்தில் மட்டும், இந்தியாவில் 7166 வரதட்சணை மரணங்கள் (கொலை, தற்கொலை) காணப்பட்டன. குடும்ப வன்முறை காரணமாக 2018-ஆம் ஆண்டில் மட்டும் 1 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் உயிரிழந்துள்ளனர்.