Kerala Governor: குண்டர்களை முதலமைச்சரே வழிநடத்தினால் காவல்துறையினரால் என்ன செய்ய முடியும் என, கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் வேதனை தெரிவித்துள்ளார்.


கேரள ஆளுநர் குற்றச்சாட்டு:


டெல்லி செல்வதற்காக திருவனந்தபுரம் விமான நிலையம் சென்று கொண்டிருந்தபோது, காரில் வந்த நபர்களால் தன் மீது நடந்த தாக்குதல் முயற்சி தொடர்பாக கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “திருவனந்தபுரம் சாலைகளை குண்டர்கள் ஆள நினைக்கின்றனர். அவர்கள் என்னை நோக்கி வந்த போது நான் காரை நிறுத்தி விட்டு அதிலிருந்து கீழே இறங்கினேன். ஆனால்,  அவர்கள் ஏன் தப்பித்து ஓடினார்கள்? காரணம், அவர்களின் பல்வேறு செயல்களால் நான் அழுத்தத்தை எதிர்கொள்ளவில்லை. அதனால் தான் இப்படி என்னை மிரட்ட முயற்சிக்கின்றனர். எனது காரை இரண்டு புறமும் அவர்கள் தாக்கினர்.






 


இதுபோன்று முதலமைச்சரின் காருக்கு அருகில் யாராவது வர முடியுமா? தாக்குதல் நடத்தியது யார் என காவல்துறையினருக்கு தெரியும். ஆனால், அந்த குண்டர்களை முதலமைச்சரே வழிநடத்தும்போது, காவல்துறையினரல் என்ன நடவடிக்கை எடுக்க முடியும். என்னை உடல்ரீதியாக தாக்குவதற்கு முதலமைச்சர் தான் சதி திட்டம் தீட்டி குண்டர்களை அனுப்பினார். அரசியலமைப்பு இயந்திரத்தின் வீழ்ச்சியை அனுமதிக்க முடியாது” என தெரிவித்துள்ளார். 


பிரச்னை என்ன?


பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தர்களை நியமனம் செய்வது தொடர்பாக, ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் இடையேயான மோதல் தொடர்ந்து வலுவடைந்து வருகிறது. இந்த விவகாரத்தில் மாநில அரசு உச்சநீதிமன்றத்தையும் நாடி இருந்தது. இந்நிலையில் தான்,  ஆளும் சிபிஎம் கட்சியின் இந்திய மாணவர் கூட்டமைப்பு (எஸ்எஃப்ஐ),  மாநிலம் முழுவதும் ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டத்தின் போது தான் ஆளுநரின் வாகனத்தின் போது, ஆளுங்கட்சியினர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த சதி திட்டத்தை தீட்டியதே முதலமைச்சர் தான் என ஆளுநர் குற்றம்சாட்டியுள்ள நிலையில்,  கேரள காங்கிரஸ் தரப்பும் அதே குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. இந்த விவகாரம் கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.