வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு, கேரளா ஆளுநர் ஆரிப் முகமது கான் அம்மாநில பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். 24 மணி நேரத்திற்குள் ஒன்பது பல்கலைகழகங்களின் துணைவேந்தர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என அவர் கெடு விதித்துள்ளார். 


இதுகுறித்து கேரள ஆளுநரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நிலைநாட்டும் வகையில், ஆளுநர் ஆரிப் முகமது கான் கேரளாவில் உள்ள 9 பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை ராஜினாமா செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்" என பதிவிட்டுள்ளார்.


 






இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு, பாதிக்கப்பட்ட அனைத்து துணை வேந்தர்களும் ஆளுநரின் உத்தரவை மதிக்க வேண்டாம் என அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. நாளை காலை 11:30 மணிக்குள் துணை வேந்தர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என ஆளுநர் கேட்டு கொண்டுள்ளார்.


கேரள ஆளுநர், மாநில அரசுக்கு இடையேயான அதிகார போட்டி உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அவருக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொடர் போராட்டங்களை அறிவித்துள்ளது.


துணை வேந்தர்களில் இருவர் ஏற்கனவே தங்கள் பதவியில் இருந்து விலக உள்ளனர். கேரள பல்கலைக்கழக துணைவேந்தர் வி.பி. மகாதேவன் பிள்ளை அக்டோபர் 24 அன்று ஓய்வு பெறுகிறார். மேலும், ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எம்.எஸ். ராஜஸ்ரீயின் நியமனம் உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது.


மகாத்மா காந்தி பல்கலைக்கழகம், கொச்சின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், கேரள மீன்வளம் மற்றும் கடல் ஆய்வுப் பல்கலைக்கழகம், கண்ணூர் பல்கலைக்கழகம், ஸ்ரீ சங்கராச்சார்யா சமஸ்கிருதப் பல்கலைக்கழகம், காலிகட் பல்கலைக்கழகம் மற்றும் துஞ்சத் எழுத்தச்சன் மலையாளப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர்களுக்குதான் ஆளுநர் கெடு விதித்துள்ளார்.


இதில், கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், கண்ணூர், மலையாளம் மற்றும் மீன்வளம் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களின் நியமனங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கி இருப்பதுதான்.


தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக எம்.எஸ்.ராஜஸ்ரீ நியமனத்தை ரத்து செய்து உச்ச நீதிமன்றத்தின் அக்டோபர் 21ஆம் தேதி அளித்த உத்தரவின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது. துணைவேந்தரை தேர்வு செய்ய அமைக்கப்பட்ட குழு சரியாக அமைக்கப்படவில்லை என்று உச்சநீதிமன்றம் கூறி இருந்தது.


மேலும், சட்டத்தின்படி ஒன்றுக்கும் மேற்பட்டவர்களின் பெயரை மாநில அரசு பரிந்துரைக்க வேண்டும். அதிலிருந்து, ஒருவரை வேந்தரான ஆளுநர் தேர்வு செய்ய வேண்டும். ராஜஸ்ரீயின் நியமனம் யுஜிசி விதிமுறைகளை மீறியதாக மனுதாரரின் கருத்தையும் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.