கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தங்கம் கடத்தல் வழக்கில் பல முக்கிய அரசியல் பிரமுகர்களுக்கும் தொடர்பு இருப்பதாக அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ் தெரிவித்துள்ளார். 


கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி கேரளாவில் உள்ள ஐக்கிய அரபு தூதரகத்திற்கு சுமார் ரூ.15 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்க கட்டிகள் வைக்கப்பட்டிருந்த பார்சல் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ஏற்கனவே அங்கு தொடர்ந்து தங்கம் கடத்தப்படுவது தொடர்பான புகார்கள் வந்த நிலையில் இவ்வழக்கில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். இதில் கேரள அரசில் தகவல் தொழில்நுட்பத்துறை அதிகாரியாக பணியாற்றி வந்த ஸ்வப்னா சுரேஷ், ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கரன் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். 


கேரளாவை உலுக்கிய இவ்வழக்கில் முதல்வர் பினராயி விஜயன், முன்னாள் அமைச்சர் கே.டி.ஜலீல் உள்ளிட்டோருக்கும் பங்கு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பான வழக்கு விசாரணை கொச்சி நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் விசாரணைக்கு நேற்று ஆஜரான ஸ்வப்னா சுரேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தங்கம் கடத்தல் வழக்கில் பல முக்கிய அரசியல் பிரமுகர்களுக்கும் தொடர்பு இருப்பதாகவும், முதலமைச்சர் பினராயி விஜயனுக்கும் இவ்விவகாரத்தில் தொடர்புள்ளது எனவும் குற்றம் சாட்டினார். 


மேலும் பினராயி விஜயன் கடந்த 2016 ஆம் ஆண்டு துபாயில் இருந்த போது அவரது தனிச்செயலாளரான ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கரன் தூதரகத்தில் செயலாளராக இருந்த என்னை தொடர்பு கொண்டு துபாய் செல்லும் போது முதலமைச்சர் தனது பைகளில் ஒன்றை மறந்து வைத்து விட்டு வந்ததாகவும், அதனை உடனடியாக கொண்டு வர வேண்டும் என தெரிவித்தார். நானும் தூதரக அதிகாரி மூலம் அந்த பையை துபாய்க்கு அனுப்பி வைத்தோம். 


அப்போது தான் அதில் ரூபாய் நோட்டுகள் இருந்தது தெரிய வந்தது. அதேபோல் சிவசங்கரன் அறிவுறுத்தலின் பேரில் தூதரக அதிகாரி வீட்டில் இருந்து பிரியாணி பாத்திரங்கள் முதலமைச்சர் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், ஆனால் அதில் என்ன இருந்தது தெரியாது எனவும் ஸ்வப்னா சுரேஷ் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் பினராயி விஜயனின் மனைவி கமலா, மகள் வீணா, கூடுதல் தனி செயலாளர் சி.எம்.ரவீந்திரன், முன்னாள் அதிகாரி நளினி நேட்டோ ஆகியோருக்கும் தொடர்பு உள்ளது என அவர்  கூறியுள்ளார். 


எனது உயிருக்கு ஆபத்து உள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளேன். மேலும் நாம் உங்களிடம் சொன்ன அனைத்தையும் வாக்குமூலத்திலும் தெரிவித்துள்ளேன். இவ்விவகாரத்தில் விரைவில் மக்களுக்கு உண்மை தெரிய வரும் என ஸ்வப்னா சுரேஷ் தெரிவித்துள்ளார். இதனால் தங்கம் கடத்தல் வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஸ்வப்னா சுரேஷின் குற்றச்சாட்டுகள் அரசியல் சதி என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.