நோயாளியின் கடைசி ஆசை:


தங்களது உயிரை துச்சமென எண்ணி நோயாளிகள் மற்றும் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை வேகமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்பவர்களாக ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் பார்க்கப்படுகிறார்கள். இச்சூழலில் தான் கேரள மாநிலத்தில் ஆம்புலனஸ் ஓட்டுனர் ஒருவரின் செயல்பாட்டுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. அதாவது கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள கிராமம் மைநாகப்பள்ளி.


இந்த கிராமத்தில் 50 வருடங்களுக்கும் மேலாக வசித்து வருபவர் போதினி பஹான். 60 வயதான இவர் கடந்த சில வருடங்களாக பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே படுத்த படுக்கையாக இருந்து இருக்கிறார். இவருக்கு சொந்த ஊர் மேற்கு வங்கம். இப்படிபட்ட சூழலில் தான் தன்னுடைய சொந்த ஊரான மேற்கு வங்க மாநிலம் ராய்கஞ்ச் நகருக்கு செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறார்.


அதோடு அவரது குடும்பத்தினரிடம் தன்னுடைய கடைசி ஆசையும் அதுதான் என்று கூறியிருக்கிறார். ஆனால் குடும்பத்தினரோ அவரை விமானத்தில் அழைத்துச் செல்ல வேண்டும் என்றால் அதிக செலவு ஆகும் என்பதால் அவரை ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்வதே சரியாக இருக்கும் என்று அவரது மகன் செளதீஷ் முடிவெடுத்திருக்கார்.


ஆம்புலன்ஸ் ஓட்டுனர் செய்த செயல்:


இதையடுத்து கருநாகப்பள்ளியை சேர்ந்த 28 வயதான அருண் குமார் என்ற ஆம்புலன்ஸ் டிரைவர் அந்த பணியை ஏற்றுக்கொண்டார். அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி காலை 7 மணியளவில் மைநாகப்பள்ளியில் இருந்து போதினி பஹானுடன் ஆம்புலன்ஸ் புறப்பட்டிருக்கிறது. அதன்படி ஏப்ரல் 24 மாலை 4.30 மணியளவில் மேற்கு வங்கம் மாநிலம் ராய்கஞ்சுக்கு சென்றடைந்தது ஆம்புலன்ஸ். அதாவது சுமார் 2870 கிலோ மீட்டர் தூரத்தை ஆம்புலன்ஸ் ட்ரைவர் அருண் வெறும் 60 மணி நேரத்தில் கடந்து அனைவரையும் ஆச்சரியத்தில் உறைய வைத்துள்ளார். இந்த பயணம் தமிழகம், ஆந்திரா, தெலங்கானா மற்றும் ஒரிசா வழியில் சென்று இருக்கிறது.


பயிற்சி..அர்ப்பணிப்பு பணி:


இந்நிலையில் இந்த பயணம் குறித்து ஆம்புலன் ட்ரைவர் அருண் குமார் கூறுகையில், ”நான் ஏற்கனவே மேற்கு வங்கத்துக்கு சென்றுள்ளேன்.  அது எனக்கு தெரிந்த வழிதான். போதினியை அவரின் ஊருக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்வதே எனது முக்கிய பொறுப்பாக இருந்தது.  எனது நவீன ஆம்புலன்ஸுக்கு நன்றி,  மிக எளிதாக 2,800 கி.மீட்டரை கடந்தோம்.  சாலைகளும் நன்றாக இருந்தது.  எரிபொருள் நிரப்புவதற்காக மட்டுமே ஆம்புலன்ஸை நிறுத்தினேன். சிறிது நேரம் ஆம்புலன்ஸை நிறுத்தும் போது போதினி சாப்பிடுவார். 


நான் ஆம்புலன்ஸின் நிலையை சரி பார்ப்பேன்.  எனது பயிற்சியும்,  அர்ப்பணிப்பும் பணியை முடிப்பதில் கவனம் செலுத்த வைத்தது.  போதினி தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருந்ததால் என்னால் அதிக நேரம் உணவுக்காக எடுத்துக் கொள்ள முடியவில்லை.  எரிபொருள் நிரப்பும்போது 10 – 15 நிமிடங்கள் மட்டுமே நிறுத்தமுடிந்தது. அப்போது,  சிற்றுண்டி மட்டுமே எடுத்துக் கொண்டேன்.  ராய்கஞ்சில் கொடுத்த வரவேற்பு மகிழ்ச்சிகரமாக இருந்தது.  அவர்கள் தங்கும் இடத்தையும் ஏற்பாடு செய்திருந்தனர். ஒருநாள் ஓய்வுக்கு பிறகும் மீண்டும் ஏப்ரல் 26-ஆம் தேதி கேரளம் வந்தடைந்தேன்”எனத் தெரிவித்தார். ஆம்புலன் ட்ரைவரின் இந்த அர்பணிப்பு உணர்வை பலரும் வாழ்த்தி வருகின்றனர்.