காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் 53% மழை பற்றாக்குறை நீடிக்கிறது என்றும் இதற்கு மேல் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர முடியாது என்றும் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் கர்நாடக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூருவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இதனால் பெங்களூருவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக தமிழகத்திற்கும் கர்நாடாகவுக்குமான தண்ணீர் பிரச்சனை தீர்ந்தபாடில்லை. பருவ மழை பிரச்சனையை காரணம் காட்டி தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடகாவும் காவிரி மேலாண்மை வாரியம் ஆணைக்கிணங்க தண்ணீர் திறக்க வேண்டும் என தமிழகமும் வாதத்தை முன்வைத்து வருகின்றன. 


இந்நிலையில், தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாண்டியா உள்ளிட்ட காவிரி படுகை பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது. மாண்டியாவில் கடந்த 23 ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெற்ற நிலையில் இன்று பெங்களூருவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இந்த முழு அடைப்பு போராட்டம் இன்று காலை 6 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிவரை நடைபெற உள்ளது. இதனால் அங்கு எந்த அசம்பாவிதங்களுக்கும் நடக்காமல் இருக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் இன்று காணொலி காட்சி மூலம் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நடைபெற்றது. இன்றைய கூட்டத்தில் இதற்கு மேல் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என கர்நாடாக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் 53% மழை பற்றாக்குறை நீடிக்கிறது, இதனால் கர்நாடகாவில் உள்ள 161 தாலுக்காக்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அம்மாநில அரசு அறிவித்துள்ளதாக கர்நாடகா அரசு தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது. நிலுவையில் உள்ள 7 டிஎம்சி நீரை உடனடியாக திறந்துவிட தமிழ்நாடு அரசு தரப்பில் வலியுறுத்தியுள்ளது.


 காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர், “அவர்கள் மாநிலத்தில் பந்த் நடைபெறுவது குறித்து நான் எதுவும் சொல்ல முடியாது. ஆனால் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தான் கடைசி தீர்ப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். கூட்டாட்சி தத்துவத்தில் மூன்று பிரிவுகள் சொல்கிறார்கள். சட்டமன்றம், நிர்வாகம் மற்றும் நீதித்துறை. நீதித்துறை என்ன சொல்கிறதோ அதை சட்டமன்றமும் நிர்வாக துறையும் கடைபிடிக்க வேண்டும் என்று சொல்வார்கள். அனைவரும் போராட்டம் ஆர்ப்பாட்டம் என நடத்த ஆரம்பித்தால் உச்ச நீதிமன்றத்திற்கு கொடுக்கப்பட்டு இருக்ககூடிய தனித்தன்மை அதிகாரம் என்ன ஆகும் என்பதை அரசியல் தெளிவுத்தன்மை பெற்றவர்கள் உணர வேண்டும்” என தெரிவித்தார். 


மேலும், “ உச்ச நீதிமன்றத்தின் படி தமிழ்நாட்டிற்கு 13/9/2023 முதல் 15 நாட்களுக்கு 5000 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என காவிரி நதிநீர் ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டது. அதை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. நாளையோடு 15 நாள் கெடு முடிகிறது. இடையிலான கர்நாடகத்தில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றாலும் நமக்கு தரப்படுகிற தண்ணீர் தந்து கொண்டிருக்கிறார்கள். ஆரம்பத்தில் 2000,3000 கன அடிகள் வழங்கியவர்கள் படிப்படியாக இன்று காலை நிலவரப்படி 7000 கன அடி வந்து கொண்டிருக்கிறது. காவிரி நதிநீர் ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்ற ஆணைப்படி இன்னும் 11000 கன அடி தண்ணீர் நமக்கு வர வேண்டி உள்ளது. நாளைக்குள் இந்த தண்ணீர் வந்துவிடும்” என குறிப்பிட்டுள்ளார்.