காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. அவ்வாறு அணை கட்டினால் தமிழ்நாட்டுக்கு வரும் தண்ணீர் பாதிக்கப்படும் எனக் கூறி தமிழக அரசு இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதை பொருட்படுத்தாத கர்நாடக அரசு மேகதாது அணையை கட்டியே தீருவோம் என தொடர்ந்து அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வர, தமிழக அரசும் அதை எதிர்த்து  சட்டரிதியான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.


தொடர் சர்ச்சையை கிளப்பும் மேகதாது அணை:


இப்படிப்பட்ட சூழலில்தான், கர்நாடகாவில் கடந்தாண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடித்தது. பாஜகவை தொடர்ந்து கர்நாடகாவில் ஆட்சி அமைத்த காங்கிரஸ் அரசும், மேகதாது விவகாரத்தில் தீவிரமாக உள்ளது. இந்த நிலையில், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணையை கட்ட அனைத்தும் தயார்நிலையில் உள்ளதாக கர்நாடக அரசு பட்ஜெட் தாக்கலின்போது அறிவிப்பு வெளியிட்டிருப்பது மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் மேகதாது மட்டும் இன்றி கலசா - பந்தூரி, மேல் கிருஷ்ணா, மேல் பத்ரா மற்றும் எட்டிஹனோல் உள்பட பல்வேறு பாசன, குடிநீர் திட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 


சட்டப்பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, "காவிரி ஆற்றின் குறுக்கே லட்சிய திட்டமான மேகதாது அணை மற்றும் குடிநீர்த் திட்டத்தைச் செயல்படுத்த தனித் திட்டப் பிரிவு மற்றும் இரண்டு துணைப் பிரிவுகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது. 


கர்நாடக பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்பு:


இந்த திட்டத்திற்கு தேவைப்படும் நிலத்தை கண்டறிய ஆய்வு நடத்தப்படும். மரங்களை எண்ணும் பணி ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து அனுமதியை பெற்ற பிறகு, பணிகளை முன்கூட்டியே தொடங்க முன்னுரிமையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.


கலசா - பந்தூரி நாலா மாற்றுத் திட்டத்தின் கீழ் 3.9 டிஎம்சி தண்ணீரைப் பயன்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கைக்கு மத்திய நீர் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. தேசிய வனவிலங்கு வாரியத்தின் வன அனுமதியை எதிர்பார்த்து மாநில அரசு டெண்டர் செயல்முறையைத் தொடங்கியுள்ளது.


இருப்பினும், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற தேசிய வனவிலங்கு வாரியக் கூட்டத்தில், வன அனுமதி வழங்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது" என்றார்.


இதுதொடர்பான அறிவிப்பு வெளியானதில் இருந்தே தமிழ்நாட்டில் இருந்து கர்நாடக அரசுக்கு கடும் எதிர்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. கர்நாடகாவின் செயல்பாட்டிற்கு தமிழ்நாடு அரசு உரிய பதிலடி தர வேண்டும் என அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்து வருகிறது. 


இதையும் படிக்க: Tirupati Lion Kills: செல்ஃபி எடுக்க ஆசைப்பட்ட விபரீதம்.. துரத்தி துரத்தி தாக்கிய சிங்கம் : திருப்பதியில் அதிர்ச்சி சம்பவம்