கர்நாடகாவில் வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். இத்திட்டம் ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.


முன்னதாக, இந்த நிதியாண்டில் காங்கிரஸின் 5 தேர்தல் வாக்குறுதிகளை மாநில அரசு நிறைவேற்றும் என்று சித்தராமையா கூறியிருந்தார்.






கிரஹ ஜோடி என்ற பெயரில் கர்நாடகாவில் வாடகை வீடுகளில் வசிப்பவர்கள் உட்பட அனைத்து வீட்டு மின்சார நுகர்வோருக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 


இந்த திட்டம் யார் யாருக்கு..? 



  • கிரஹ ஜோதி என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த திட்டத்தில் இணைய கர்நாடகா மக்கள்,சேவா சிந்து இணையதளம் வாயிலாக அனைத்து ஆவணங்களையும் பதிவிடவேண்டும்.

  • கிரஹ ஜோதி திட்டத்தில் யாரும் முறைகேடாக பயன்படுத்தாத வகையிலும், அதிகபட்ச மக்களுக்கு சென்று சேரும் வகையிலும் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

  • ஒருவரின் பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட இணைப்புகள் இருந்தால், அதில் ஒரு இணைப்புக்கு மட்டுமே இலவச மின்சார திட்டம் பொருந்தும்

  • இந்த திட்டம் வணிக நோக்கங்களுக்கு மின்சாரம் பயன்படுத்துவோருக்கு பொருந்தாது.

  • மாதந்தோறும் மீட்டர் அளவிடும்போது, மொத்த மின் பயன்பாட்டிற்கு கட்டணத்தை கணக்கிட வேண்டும்.

  • அனுமதிக்கப்பட்டதை விட கூடுதலாக பயன்படுத்திய மின்சாரத்திற்கு மட்டுமே கட்டணத்தை கணக்கிட்டு மின் நுகர்வோருக்கு வழங்க வேண்டும்.

  • 200 யூனிட்க்கு மேல் கூடுதலாக பயன்படுத்திய மின்சாரத்திற்கு மட்டும் கட்டணத்தை செலுத்தினால் போதுமானது.

  • இந்த திட்டத்திற்காக, வாடிக்கையாளர் எண்ணுடன், வங்கியின் நுகர்வோர் எண் மற்றும் ஆதார் எண்ணையும் சேர்த்து இணைக்க வேண்டும்.

  • 2023ம் ஆண்டு ஜூன் மாதம் வரை மின் கட்டணம் நிலுவையில் இல்லாதவர்கள் மட்டுமே இதில் பயன் பெறுவர்.

  • மின் கட்டண பாக்கியை வருகின்ற 3 மாதத்திற்குள் செலுத்த வேண்டும். அதற்குள் பாக்கியை செலுத்த தவறினால் மின் இணைப்பு துண்டிக்கப்படும்.