மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமாக பொறுப்பு வகிப்பவர் ராகுல் காந்தி. இவர் தற்போது அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு ராகுல்காந்தி பங்கேற்ற நிகழ்ச்சியில் இட ஒதுக்கீடு, ஆர்.எஸ்.எஸ். குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்தார்.



ராகுல் காந்தி என்ன சாதி?


அவரது கருத்துக்கு பா.ஜ.க.வினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். டெல்லியில் உள்ள அவரது வீட்டை முற்றுகையிட்டு பா.ஜ.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், கர்நாடக பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஒருவர் ராகுல்காந்தி குறித்து சர்ச்சைக்குரிய கேள்வி எழுப்பியுள்ளார்.


கர்நாடகாவின் பிஜப்பூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. பசங்கவுடா பாட்டீல் யத்னால் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது, “ராகுல் காந்தி அமெரிக்காவிற்கு சென்று நாட்டிற்கு எதிரான கருத்துக்களை கூறுகிறார். ஆனால், அவருக்கு அவர் எந்த சமூகத்தில்(சாதி) பிறந்தவர் என்பது அவருக்குத் தெரியாது. அவருக்கு இந்துவாக பிறந்தாரா? அல்லது இஸ்லாமியராக பிறந்தாரா? என்பது குறிப்பிடத்தக்கது. கண்டிப்பாக அது குறித்து விசாரிக்க வேண்டும்.


நாட்டுத் துப்பாக்கி:


ஒருவேளை அவர் பிராமணர் என்றால் அவர் எந்த பிரிவு பிராமணர்? அவர் பூணூல் அணிந்த பிராமணரா? இந்தியாவில் ஏராளமான நாட்டுத் துப்பாக்கிகள் உள்ளது. ராகுல் காந்தி நாட்டுத் துப்பாக்கி போன்றவர். அதனால் எதுவும் நடக்காது”


இவ்வாறு அவர் பேசியுள்ளார்.


பா.ஜ.க. எம்.எல்.ஏ.வின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராகுல் காந்தியைப் பார்த்து எந்த சாதி? எந்த மதம்? என்று பா.ஜ.க. எம்.எல்.ஏ. பேசியதற்கு காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  ராகுல்காந்தி அமெரிக்காவில் பேசியதற்கு கண்டனம் தெரிவித்த பா.ஜ.க.வினர் சிலர் சர்ச்சைக்குரிய பல கருத்துக்களைத் தெரவித்தனர். கர்நாடக பா.ஜ.க. எம்.எல்.ஏ. பேசியது போலவே இமாச்சல பா.ஜ.க. தலைவர் ஜாதி தெரியாதவர் மக்கள் தொகைக் கணக்கெடுப்பைப் பற்றி பேசுகிறார் என்று கூறியிருந்தார்.


குவியும் கண்டனம்:


தற்போது சர்ச்சைக்குரிய கருத்தைக் கூறியுள்ள பா.ஜ.க. எம்.எல்.ஏ. 2023ம் ஆண்டு டிசம்பரில் இந்தியாவின் முதல் பிரதமர் நேரு அல்ல சுபாஷ் சந்திரபோஸ் என்று கூறியிருந்தார். மேலும், கடந்த ஆகஸ்ட் மாதம் கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் 7 மாதத்தில் கவிழும் என்றும் சர்ச்சைக்குரிய கருத்தை கூறியிருந்தார்.


தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்தை கூறி வரும் கர்நாடக பா.ஜ.க. எம்.எல்.ஏ. பசங்கவுடா பாட்டீல் மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்தை கூறியிருப்பது கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.