கொரோனா தொற்றின் இரண்டாவது அலை இன்னும் நீங்காத நிலையில், கன்வர் யாத்திரை நடத்தும் உத்தரபிரதேச அரசின் முடிவை இந்திய உச்சநீதிமன்றம்  கேள்வி எழுப்பியுள்ளது. 


இந்த விவகாரத்தை தானாக முன்வந்து  கையில் எடுத்து விசாரித்த உச்சநீதிமன்றம், எதன் அடிப்படையில்  அனுமதி கொடுக்கப்பட்டது என மத்திய மாநில அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அத்துடன் இந்த வழக்கு மீண்டும் வெள்ளிக்கிழமை விசாரிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. உத்தராகண்ட் மாநிலம்  ஹரித்வார், கங்கோத்திரி (Gangotri) , பீகார் மாநிலம் சுல்தான்கான், உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியா, பிரக்யராஜ் , வாரணாசியில் ஆண்டுதோறும் புகழ்மிக்க கன்வர் யாத்திரை நடைபெற்று வருகிறது. 


இந்துக்களின் புனித மாதம் என்று அழைக்கப்படும் சாவன் மாதத்தின் முதல் இந்த பாத யாத்திரையை மேற்கொள்கின்றனர். மேற்கு உ.பி, ஹரியானா, பஞ்சாப், டெல்லி ஆகிய மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் வாரணாசி, ஹரித்வார் பகுதிகளில் உள்ள கங்கை நதியால் நிரப்பப்படும் தண்ணீர் குடத்தை சுமந்து கொண்டு நடக்கின்றனர். இந்த தீர்த்தக் காவடி சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவிற்கு இருக்கும் என்று கணக்கிடப்படுகிறது. பின்னர், அங்குள்ள கோயில்களில் சிவனை தரிசித்து தண்ணீரை காணிக்கையாக அளித்துவிடுகின்றனர். இது, தமிழ்நாட்டில் பழனி காவடி யாத்திரையாக கொண்டாடப்படுகிறது. 




யோகி ஆதித்தியநாத்


2017ம் ஆண்டு உத்தரபிரதேச மாநில முதல்வராக யோகி ஆதித்தியநாத் பதவியேற்ற பிறகு  கன்வர் யாத்திரை மிகுந்த முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. 2017 சட்டமன்றத் தேர்தல் பரப்புரையில் கன்வர் யாத்திரயை பாஜக முதன்மைபடுத்தியது. அகிலேஷ் யாதவ் ஆட்சிக்காலத்தில் யாத்ரீகர்கள் புறக்கணிக்கப்பட்டதாக  யோகி முன்னதாக தெரிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக, 2019ல் யாத்ரீகர்களுக்கு ஹெலிகாப்டரில் மூலம் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அடுத்தாண்டு, அம்மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருப்பதால், கன்வர் யாத்திரை பெரிய அரசியல் கேள்வியாக உருவெடுத்துள்ளது.  தற்போது, கொரோனா இரண்டாவது அலை காரணமாக,  ஹரித்வாரில் ஆண்டுதோறும் நடைபெறும்  கன்வர் யாத்திரை இந்த ஆண்டு தடை செய்வதாக உத்ராகண்ட் மாநில முதல்வர் சில தினங்களுக்கு முன் அறிவித்தார். ஆனால், உ.பியில் ஜூலை 25-ல் இருந்து கன்வர் யாத்திரை நடைபெறும்  என அம்மாநில அரசு அறிவித்தது.




உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது தொடர்பாக பதிலளித்த கூடுதல் தலைமைச் செயலாளர் நவ்னீத் சேகல், "நாங்கள் உரிய நேரத்தில் பதில் மனுவை தாக்கல் செய்வோம். கன்வர் யாத்திரை  அனுமதிக்கப்பட வேண்டும் என்பதே அரசின் தற்போது வரையிலான நிலைப்பாடு. கூட்ட நெரிசல் ஏற்படும் பகுதிகளில் கட்டுப்பாடுகளை விதிக்கவும், சரியான நடத்தை விதிமுறைகள் பின்பற்றப்படுவதையும்  உறுதி செய்ய வேண்டும். தேவைப்பட்டால், கொரோனா நோய் இல்லை சான்றிதழ் கட்டாயமாக்கப்படலாம்" என்று தெரிவித்தர். முன்னதாக, கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின்போது, 60 லட்சம் பக்தர்கள் கங்கையில் நீராட அனுமதித்ததை  உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம் கடுமையாக விமர்சித்தது. மேலும், கும்பமேளா நிகழ்வின்போது மேற்கொள்ளப்பட்ட லட்சக்கணக்கான கொரோனா பரிசோதனைகள் போலியானவை என்றும் பின்னாளில் கண்டறியப்பட்டது. 


Kumbh Mela Fake Covid 19 : கும்ப மேளாவில் கோவிட் பரிசோதனைகள் போலியானவை : சுகாதாரத்துறை தகவல்..!