ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த சட்டப்பேரவை தேர்தலில் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் படுதோல்வியைச் சந்தித்தது. இந்தநிலையில், சந்திரபாபு நாயுடு, கடந்த இரண்டரை ஆண்டுகளாக சட்டப்பேரவையில் தான் அவமானப்படுத்தப்பட்டு வருவதாகவும், இத்தனை நாட்கள் தான் அமைதியாக இருந்ததாகவும் கூறினார்.


ஆனால், இன்று தனது மனைவி குறித்து அவதூறாக பேசுவதாகவும், தான் மானத்துடன் வாழ்பவன், இனி என்னால் இதற்குமேல் தாங்கிக்கொள்ள முடியாது என்று கூறி கண்ணீர்விட்டு அழுதார். அடுமட்டுமின்றி இனி இந்த சட்டப்பேரவைக்குள் முதலமைச்சராகத்தான் நுழைவேன் என கூறி பேரவையிலிருந்து வெளியேறினார். இந்தச் சம்பவம் ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.




இந்நிலையில் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “நாம் எதைப் பற்றி பேசினாலும் அது நமது ஆளுமையை வரையறுக்கிறது. அரசியலில், விமர்சனங்கள் மற்றும் பதிலடிகள் மிகவும் பொதுவானவை, ஆனால் அவை அனைத்தும் பொதுப் பிரச்சனைகளுக்கு மட்டும்  இருக்க வேண்டுமெயொழிய தனிப்பட்டதாக இருக்கக்கூடாது. 


 






நேற்றைய சட்டப்பேரவை சம்பவம் என்னைத் தூண்டிவிட்டது. எப்போதெல்லாம் பொதுப் பிரச்சினைகளை புறந்தள்ளி, தனிப்பட்ட விமர்சனங்களுக்கு அடிபணிந்து, பெண்களை பிரச்சினைக்குள் இழுக்கிறோமோ அது அராஜகத்திற்கு வழிவகுக்கிறது. அது தவறு. 


பெண்களை மதிப்பது நமது கலாசாரம், அது நமக்குள் பொதிந்துள்ள ஒரு பாரம்பரியம். மேலும் இதுபோன்ற பாரம்பரியத்தை நமது வருங்கால சந்ததியினருக்கும் கொண்டு செல்ல வேண்டும்” என காணொலி வெளியிட்டுள்ளார்.


முன்னதாக சந்திரபாபுவின் குற்றச்சாட்டு குறித்து ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, “சந்திரபாபு நாயுடு கண்ணீர் வடித்தது ஒரு நாடகம். ஆம். சந்திரபாபு நாயுடுவின் நிலையும், அவர் விரக்தியில் இருக்கிறார் என்பது எனக்கு மட்டுமின்றி, மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் தெரியும். மாநில மக்கள் அவரை வெளிப்படையாக நிராகரித்துள்ளனர். அவரது சொந்த தொகுதியான குப்பம் தொகுதியில்கூட, நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு மக்களின் நிராகரிப்பைச் சந்தித்தார்.




சந்திரபாபுநாயுடு அனைத்திலும் அரசியல் மைலேஜ் பெற மட்டுமே முயற்சிக்கிறார். இது மிகவும் துரதிஷ்டவசமானது. அப்போது, நான் சபைக்குள் இல்லாவிட்டாலும் அவரது நாடகம் அனைத்து கண்களுக்கும் தெரிந்தது.அவரது குடும்பத்தை பற்றி எங்கள் தரப்பில் பேசியதற்கான எந்த குறிப்பும் இல்லை. ஆனால், என்னுடைய கொல்லப்பட்ட மாமா, தாய் மற்றும் சகோதரி உள்பட எனது குடும்ப உறுப்பினர்கள் பற்றி சந்திரபாபுவே பேசியுள்ளார். நாடாளுமன்றத்தில் உள்ள பதிவுகள் அதை தெளிவாக நிரூபிக்கின்றன” என கூறியிருந்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண