ஜம்மு-காஷ்மீர் ரஜோரி மாவட்டத்தில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மஞ்சகோட் தாசில்தார் ஜாவேத் சவுத்ரி தகவல் தெரிவித்துள்ளார். பிம்பர் காலி பகுதியில் நடந்த விபத்தில் படுகாயமடைந்த நபர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 






 


இந்த விபத்தில் 12 பேர் காயமடைந்ததாகவும், இறப்பு எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


பேருந்து சூரன்கோட் பூஞ்ச் பகுதியில் இருந்து ஜம்மு நோக்கி சென்று கொண்டிருந்தது. இது மஞ்சகோட் பகுதியில் உள்ள டேரி ராலியோட் என்ற இடத்தில் சாலையில் இருந்து சறுக்கி பள்ளத்தாக்கில் விழுந்தது. பாதுகாப்புப் படையினரும், உள்ளூர் மக்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.






ஜே & கே லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா உயிர் இழப்புகளுக்கு வருத்தம் தெரிவித்தார், மேலும் மாவட்ட நிர்வாகம் அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது என்று கூறினார்.


"ரஜோரியில் நடந்த ஒரு கோர விபத்தில் உயிர் இழந்ததால் வேதனை அடைந்தேன். துயரத்தின் இந்த நேரத்தில், என் எண்ணங்கள் இறந்த குடும்பத்தினருடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். மாவட்ட நிர்வாகம் அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது" என்று கவர்னர் அலுவலகம் தெரிவித்துள்ளது.


முன்னதாக, கடந்த புதன்கிழமை, ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் ஒரு மினி பேருந்து ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்ததில் நான்கு பெண்கள் உட்பட 11 பேர் இறந்தனர் மற்றும் 29 பேர் காயமடைந்தனர்.


பேருந்து காலி மைதானத்தில் இருந்து பூஞ்ச் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது காலை 8.30 மணியளவில் சாவ்ஜியன் எல்லைப் பகுதியில் உள்ள பிராரி நல்லா அருகே விபத்துக்குள்ளானது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். உடனடியாக ராணுவம், போலீசார் மற்றும் உள்ளூர் கிராம மக்கள் இணைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.


பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி திரௌபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் மற்றும் பள்ளத்தாக்கைச் சேர்ந்த பல தலைவர்கள் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தனர். 9 பயணிகள் சம்பவ இடத்திலேயே இறந்து உயிரிழந்ததாகவும், மேலும் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் உயிரிழந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


மேலும், காயமடைந்த 29 பேரில் ஒன்பது பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது, அவர்களில் 6 பேர் சிறப்பு சிகிச்சைக்காக ஜம்முவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.