PM Mpdi on J&K: ஜம்மு & காஷ்மீரில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என, பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


ஸ்ரீநகரில் பிரதமர் மோடி:


 ஸ்ரீநகரின் ஷேர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் (SKICC) நேற்று நடைபெற்ற, இளைஞர்களுக்கு திறனூட்டுவது தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்றது. மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்ற பின்,  நரேந்திர மோடி ஜம்மு-காஷ்மீரில் முதல்முறையாக ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது  சட்டமன்றத் தேர்தல் மற்றும் மாநில அந்தஸ்து தொடர்பாக வாக்குறுதி அளித்தார்.


மோடி தந்த வாக்குறுதிகள்:


நிகழ்ச்சியில் உரையாற்றி பிரதமர் மோடி, “சட்டசபைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன. உங்கள் வாக்கு மூலம் ஆட்சியைத் தேர்ந்தெடுக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை. ஜம்மு-காஷ்மீர் ஒரு மாநிலமாக அதன் சொந்த எதிர்காலத்தை தீர்மானிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.






ஜம்மு-காஷ்மீர் மக்கள் உள்ளூர் அளவில் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அவர்கள் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்க வழிகளைக் காண்கிறீர்கள். இதைவிட சிறந்தது என்ன? எனவே, இப்போது சட்டமன்றத் தேர்தலுக்கான ஆயத்தங்களும் தொடங்கியுள்ளன. காலம் வெகு தொலைவில் இல்லை. உங்கள் வாக்குகள் மூலம் ஜம்மு காஷ்மீரின் புதிய அரசை தேர்வு செய்வீர்கள். காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஏற்படும் மாற்றங்களை உலகம் முழுவதும் கண்டு வருகிறது” என தெரிவித்துள்ளார்.


சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மோடி அரசு:


ஜம்மு-காஷ்மீர் கடந்த 2019ம் ஆண்டில் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. அதன் சிறப்பு அந்தஸ்தும் ரத்து செய்யப்பட்டது. தற்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவால் வாக்குறுதியளிக்கப்பட்ட மாநில அந்தஸ்தை அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர். இப்பகுதியில் கடந்த 2014-ம் ஆண்டு கடைசியாக சட்டசபை தேர்தல் நடந்த நிலையில்,  அப்பகுதி மக்கள் புதிய தேர்தலை எதிர்நோக்கி உள்ளனர். 


இந்த சூழலில் தான் ஜம்மு & காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து திரும்புவது என்பது பிரதமர் மோடியின் மூன்றாவது ஆட்சியின் போது பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படும் ஒரு முக்கிய அம்சமாக உள்ளது. இருப்பினும் அரசாங்கத்தால் தற்போது வரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. இதனிடையே, உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 30ம் தேதிக்குள் ஜம்மு & காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அதன் விளைவாகவே தேர்தலுக்கான ஆயத்தப்பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.  சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து அங்கு மாநில அந்தஸ்தும்  மீட்டெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.