Chandrayaan-3 Mission: நிலவுக்கு அனுப்பப்பட்டுள்ள சந்திராயன் 3 விண்கலம் கடந்த 14-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. நான்கு கட்டங்கள் வெற்றிகரமாக முடிந்துள்ளது. தற்போது சந்திராயன் 3 ஐந்தாவது கட்டத்துக்கு உயர்த்தப்பட்டுள்ளது.


சந்திரயான் 3 விண்கலம்:


கடந்த 2019-ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் 2 விண்கலத்தின் தோல்வியின் மூலம் கிடைத்த படிப்பினைகளை கொண்டு 4 ஆண்டுகால முயற்சிகளுக்குப் பிறகு, சந்திரயான் 3 விண்கலம் கடந்த 14-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. அடுத்ததாக, 40 நாட்கள் பயணம் செய்து  ஆகஸ்ட் 23-ஆம் தேதி மாலை 5.47 மணியளவில் நிலவில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் முக்கியமாக 10 கட்டங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் எல்.வி.எம் 3 ராக்கெட் பூமியின் தரைப்பரப்பில் இருந்து 170 கிலோமீட்டர் உயரத்திற்கு சந்திரயான் 3 விண்கலத்தைக் கொண்டு சென்று நிலைநிறுத்தியதுதான் முதற்கட்டம். அது வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. அதேபோல் நான்கு கட்டங்கள் வெற்றிகரமாக முடிந்துள்ளது. தற்போது சந்திராயன் 3 ஐந்தாவது கட்டத்துக்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஐந்தாவது கட்டம் என்பது, அடுத்தகட்டமாக சம ஈர்ப்புவிசை புள்ளியை நோக்கிய பாதையில் பிசிறுகள் ஏற்பட்டு, விண்கலம் பாதை மாறிவிடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அப்படி மாறாமல் இருக்க, அந்தப் பிசிறுகளைச் சரிசெய்துகொண்டே இருப்பது தான் ஐந்தாவது கட்டம்.


இஸ்ரோ அறிவிப்பு: 






இதுதொடர்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் “ சந்திரயான்-3 விண்கலத்தை கடைசி சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் நடவடிக்கை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. தற்போது, விண்கலத்தின் நிலை இயல்பாக உள்ளது. விண்கலம் இப்போது 1,27,609 கி.மீ. x 236 கி.மீ. சுற்றுப்பாதையில் உள்ளது. ஆகஸ்ட் 1ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு சந்திரயான்-3 சுற்றுவட்டப் பாதையில் இருந்து வெளியேறி நிலவை நோக்கி பயணிக்கும்”  என குறிப்பிட்டுள்ளது.


 


மீதமுள்ள கட்டங்கள்:



  • சம ஈர்ப்பு விசை புள்ளிக்குச் சென்ற விண்கலம் புவியின் ஈர்ப்புவிசைப் பிடியிலிருந்து விடுபட்டு, நிலவின் ஈர்ப்புவிசை வட்டத்திற்குள் செல்ல உந்துதல் கொடுக்கப்படுவது ஆறாவது கட்டம்.

  • நிலவின் ஈர்ப்புவிசை வட்டத்திற்குள் வந்த பிறகு சந்திரயான் 3 விண்கலனை நிலவின் நீள்வட்டப் பாதையில் சுற்ற வைக்கவேண்டும் என்பது ஏழாவது கட்டம்.

  • விண்கலம் பயணிக்கும் நீள்வட்டப் பாதையின் உயரத்தை சிறிது சிறிதாக குறைத்து, நிலவின் தரைப்பரப்பில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் விண்கலத்தைக் கொண்டு வந்து நிலைநிறுத்துவதோடு, அதே தொலைவில் நிலவை சுற்ற வைப்பது எட்டாவது கட்டம்.

  • ஒன்பதாவது கட்ட செயல்முறை என்பது வெறும் 15 நிமிடங்களில் நிகழ்த்தப்பட உள்ளது. அந்த பதினைந்து நிமிடங்கள் தான் சந்திரயான் 3 விண்கலத்தின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க உள்ளது. விண்கலத்தில் புரபல்சன் மற்றும் விக்ரம் என்ற லேண்டர் என்ற இரண்டு முக்கியப் பகுதிகள் உள்ளன. அந்த லேண்டரில் தான் ரோவர் கருவியும் அமைந்துள்ளது. தரையிறக்கத்தின் போது உந்துவிசை கருவியையும், லேண்டரையும் தனியாக பிரிக்க வேண்டியுள்ளது. அப்படிப் பிரித்து, லேண்டரை அதிகபட்சமாக 100 கிலோமீட்டர் முதல் குறைந்தபட்சமாக 30 கிலோமீட்டர் வரை நீள்வட்டப் பாதையில் செலுத்துவார்கள். லேண்டரின் கீழே நான்கு குட்டி ராக்கெட்டுகள் உள்ளன. அந்த ராக்கெட்டுகளின் உதவியுடன், லேண்டரை மெல்ல மெல்லத் தரையிறக்க வேண்டும். இவை அனைத்தும் வெறும் 15 நிமிடங்களில் நிகழ வேண்டும்

  • இறுதிக்கட்டமாக, நிலவின் மேற்பரப்பில் லேண்டர் தரையிறங்கியதும், அதைச் சுற்றி அமைக்கப்பட்டிருக்கும் சுவர்களில் ஒன்று கீழ்நோக்கி சரியும். அந்த சாய்வுப் பலகையின் வழியே ரோவர் பயணித்து நிலவில் தடம் பதிக்கும். தொடர்ந்து பயணித்து ஆய்வுப்பணிகளை மேற்கொள்வது தான் சந்திரயானின் 10வது கட்டமாகும்.