தீபாவளி கொண்டாட்டங்கள் களைகட்டி வரும் சூழலில், பண்டிகை நெருங்கி வருகிறது. ஏற்கெனவே திட்டமிட்டு, ரயிலில் டிக்கெட் போடாதவர்களும் டிக்கெட் கிடைக்காதவர்களும் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்தி உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டைப் பெறலாம்.


ஐஆர்சிடிசி எனப்படும் இந்திய ரயில்வே, விகல்ப் என்னும் ஒரு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம், முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட் கிடைக்காத பயணிகள், மாற்று ரயிலில் உறுதிப்படுத்தப்பட்ட இருக்கையைப் (கன்ஃபார்ம் டிக்கெட்) பெற முடியும். 



  • காத்திருப்புப் பட்டியலில் இருக்கும் அனைத்து பயணிகளுக்கும் இந்தத் திட்டம் பொருந்தும். எனினும் முன்பதிவு செய்வதற்கு, விகல்ப் திட்டத்தைத் தேர்வு செய்திருக்க வேண்டும்.

  • இந்தத் திட்டம் அனைத்து வகையான ரயில்கள் மற்றும் வகுப்புகளுக்கும் பொருந்தும். 

  • விகல்ப் திட்டத்தின் கீழ், பயணிகள் அதிகபட்சமாக ஏழு ரயில்களைத் தேர்வுசெய்யலாம். 

  • விகல்ப் திட்டத்தின் கீழ், பயணிகள் மாற்று ரயிலில் பெர்த் பெற பயணிகளிடம் எவ்வித கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படாது.

  • அதே நேரத்தில் விகல்ப்ட் திட்டத்தின்மூலம் உறுதிப்படுத்தப்பட்ட சீட் கட்டாயம் கிடைக்கும் என்று கூற முடியாது. எனினும் சீட் கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்.


விகல்ப் திட்டம் (Vikalp Scheme) எப்படி வேலை செய்கிறது?


ஒரு பயணி விகல்ப் திட்டத்தைத் தேர்வு செய்தால் வெயிட்டிங் லிஸ்ட்டில் இருக்கும் டிக்கெட்,அதே பாதையில் பயணிக்கும் வேறு ரயிலுக்கு மாற்றப்படும். அந்த ரயில் அதிகபட்சம் 12 மணி நேரம் வித்தியாசத்தில் பயணிக்கும் ரயிலாக இருக்கும். அதே பாதையில் செல்லும் ரயிலாகவும் இருக்கும்.


குறிப்பாக தீபாவளி மாதிரியான நேரங்களில், இந்தத் திட்டம் பயனுள்ளதாக இருக்கும். கடைசி நேர டிக்கெட் திண்டாட்டங்களில் இருந்து விடுதலை பெற உதவும்.


மாற்று ரயிலில் டிக்கெட் இருந்தால், உடனே டிக்கெட் உறுதிப்படுத்தப்பட்டு குறுஞ்செய்தி அனுப்பப்படும். எனினும் பிறகு அதை கேன்சல் செய்தால், வழக்கமான கேன்சல் செய்யப்படும் கட்டணங்கள் உண்டு என்றும் இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.