கர்நாடக மாநிலம் பெலகாவியில் உள்ள பள்ளி ஒன்றின் மதிய உணவு நேரத்தின்போது பல்லி கலந்த பாலை குடித்த 23 மாணவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பள்ளி நிர்வாகத்தின் செயல்பாடு குறித்து தற்போது கேள்விகள் எழுந்துள்ளன.


கல்வித் துறையின் கூற்றுப்படி, பெலகாவியில் உள்ள ஒரு அரசு தொடக்கப் பள்ளியில் வியாழக்கிழமை (ஜனவரி 11) காலை குறைந்தது 23 மாணவர்கள் பால் குடித்துள்ளனர். அப்போது திடீரென அவர்களுக்கு மயக்கம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து கல்வித்துறை விசாரணையை தொடங்கியுள்ளது.


கல்வி அதிகாரிகள் சொன்னது என்ன..?


சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் ஹுக்கேரி தொகுதி கல்வி அலுவலர் (பிஇஓ) பிரபாவதி பாட்டீல் பள்ளிக்கு சென்று பார்வையிட்டார். விசாரணைக்கு பிறகு அவர் கூறுகையில், “முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பால் குடிக்கும் குழந்தைகள் அனைவரையும் சங்கேஷ்வர் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வருகிறோம். மாணவர்கள் பீதி அடையாமல் இருக்க, அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான காரணத்தை கூறாமல் தவிர்த்துள்ளோம்" என்றார். மேலும், சம்பவம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டு, யாருடைய அலட்சியத்தால் இது நடந்தது என்பது கண்டறியப்பட்டு வருகிறோம் என்றும், தவறை சரிசெய்து கண்டிப்பாக உரிய நடவடிக்கை எடுப்போம் என்றும் தெரிவித்தார்.


 400 மாணவ, மாணவியர் பயிலும் பள்ளி:


கானாபூர் கிராமத்தில் உள்ள பள்ளி வளாகத்தில் கன்னடம், மராத்தி, உருது ஆகிய தொடக்கப்பள்ளிகள் உள்ளன. இதில், 400 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். காலை 11.30 மணியளவில் மாணவர்களுக்கு மதிய உணவில் பால் வழங்கப்பட்டது. பால் பரிமாறும் நபர் ஒருவர் பாத்திரத்தின் அடிப்பகுதியில் இறந்து கிடந்த பல்லியை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து, இதுகுறித்து உடனடியாக ஆசிரியர்களிடம் கூறியுள்ளார்.


தகவலறிந்து விரைந்த ஆசிரியர்கள், இதுவரை குடிக்காத அனைத்து மாணவர்களிடமிருந்தும் பாலை திரும்ப வாங்கியுள்ளனர். அப்போது, பால் கொடுக்கப்பட்ட 50 க்கும் மேற்பட்ட மாணவர்களில் 23 பேர் ஏற்கனவே அந்த பல்லி விழுந்த பாலை உட்கொண்டதாகவும் பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பிரபாவதி பாட்டீல் கூறினார்.


தலைமை ஆசிரியர் என்ன சொன்னார்?


சம்பவம் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் கூறுகையில், தகவல் கிடைத்ததும் உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைத்து பாதிக்கப்பட்ட குழந்தைகள் அனைவரையும் சங்கேஷ்வர் நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். தற்போது அனைத்து குழந்தைகளும் நலமாக உள்ளனர். இரண்டு ஆம்புலன்ஸ்கள் மற்றும் சில தனியார் வாகனங்களில் குழந்தைகள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். குழந்தைகளின் பெற்றோரும் மருத்துவமனையில் உள்ளனர்.


இந்தநிலையில், இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி நிர்வாகத்துக்கும், பால் வழங்கும் நிறுவனத்துக்கும் கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.