இந்திய பத்திரிக்கை புகைப்படக் கலைஞர் டேனிஷ் சித்திக்-ஐ  தாலிபான்கள் திட்டமிட்டு படுகொலை செய்ததாக Washington Examiner என்ற அமெரிக்கா நாளிதழ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.  ஜூலை 16ம் தேதி ஆப்கானிஸ்தான் காந்தஹாரில், பாதுக்காப்புப் படையினர் மற்றும் தாலிபான்கள் இடையேயான மோதலில் டேனிஷ் சித்திக் உயிரிழந்தார். 


2021, ஜூலை 14 அன்று, தாலிபான் படைகள் காந்தஹாரின் தெற்கு பிராந்தியமான ஸ்பின் போல்டக் நகரைக் கைப்பற்றியது. முக்கிய சந்தை நகரமாகக் கருதப்படும் இது, பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான இரண்டாவது மிகப்பெரிய நேரடி நுழைவு வசதியைக் (Port of Entry) கொண்டுள்ளது. நகரை மீண்டும் கைப்பற்றும் முயற்சியாக, ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதலைத் தொடர்ந்தனர். இந்த மோதலில் இந்திய புகைப்பட பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக்  கொல்லப்பட்டார்.


வாஷிங்டன் எக்ஸாமினர் அறிக்கையின்படி, " பிரபல ஆங்கில நாளிதழான ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் சார்பாக ஆப்கானிஸ்தான் பாதுக்காப்பு படையினர் குழுவில் சித்துவும் இடம்பெற்றிருந்தார்.


Welsh எல்லை சோதனைச் சாவடி அருகே முன்னேறுகையில், தாலிபான்கள் தாக்குதலைத் தொடங்கியது. இதனால், ஆப்கானிஸ்தான் படையினர் சிதறத் தொடங்கின. சித்திக்- போர் தளபதி இடையேயான தொடர்பும் துண்டிக்கப்பட்டது. தாக்குதலில் காயமடைந்த அவர், அங்குள்ள உள்ளூர் மசூதிக்குள் தஞ்சமடைந்தார். மசூதிக்குள் பத்திரிகையாளர் ஒளிந்திருக்கும் தகவல் அறிந்த பின்பு தான், தாலிபன்கள் மசூதியை தாக்கத் தொடங்கினர்.   



தாலிபன்கள் அவரைக் கைப்பற்றியபோது சித்திக் உயிருடன் இருந்தார். அவரின், அடையாளங்கள் சரிபார்க்கப்பட்டன. அதன் பின்னர்தான் சுட்டு படுகொலை செய்யப்பட்டார் . சித்திக்கை காப்பாற்ற நடந்த முயற்சியின் போதுதான் போர் தளபதியும், எஞ்சிய வீரர்களும் உயிரிழந்தனர்.  American Enterprise Institute என்ற நிறுவனத்தின் மூத்த ஆய்வாளருமான மைக்கேல் ரூபின்  கூறுகையில்," சமூக ஊடங்களில் பரவலாக காணப்படும் இறந்த சித்திக்கின் புகைப்படத்தைத் தவிர, மற்ற புகைப்படங்களிலும், இந்திய அரசு பகிர்ந்து கொண்ட விடியோவையும் மதிப்பாய்வு செய்தேன். தலைக்கு அருகே தீவிர காயங்கள் இருந்தன. கொடூரமாக தாக்கப்பட்ட பின்பு தான், சுட்டுக் கொல்லப்பட்டார்" என்று தெரிவித்தார். 


 



மறைந்த சித்திக் உடல் 


 


முன்னதாக, டேனிஷ் சித்திக் மரணத்திற்கு வருந்துவதாகவும், இவருடைய மரணத்திற்கு நாங்கள் காரணம் இல்லை என தாலிபன் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் CNN news 18 செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். யுத்தக் களத்திற்கு வரும் பத்திரிக்கையாளர்கள் குறித்த உரிய தகவல் எங்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.  முன்கூட்டியே தெரிவித்திருந்தால் சரியான நடைமுறையை பின்பற்றி இருப்போம் என கூறினார்.


டேனிஷ் சித்திக்: இந்தியாவின் மிகவும் பிரபலமான புகைப்படச் செய்தியாளர் டேனிஷ் சித்திக்.  பிரபல செய்தி நிறுவனமான ராய்டர்ஸில் தற்போது பணியாற்றி வந்தார். இவரது புகைப்படங்களின் வாயிலாகவே மக்கள் படும் இன்னல்களை  உலகிற்கு எடுத்துக்கூறியவர். குறிப்பாக இந்தியாவில் கோரத்தாண்டம் ஆடிய கொரோனா தொற்றின் பாதிப்புகளை உலகறியச் செய்ததில் இவரின் பங்கு முக்கியமானது. கொரோனா தொற்றினால் ஆயிரக்கணக்கான மக்கள் கொத்து கொத்தாக உயிரிழந்த நிலையில் சுடுகாட்டில் வைத்து எரித்தப் புகைப்படம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியதோடு அச்சத்தினையும் ஏற்படுத்தியது. மேலும் அரசுத் தரப்பு அலட்சியங்களையும், ஆக்சிஜன் பற்றாக்குறை, அவலங்கள் என பல உண்மைகளை தனது புகைப்படங்கள் மூலம் உலகம் முழுவதும் கொண்டு சேர்த்தவர் டேனிஷ் சித்திக். உத்தரப் பிரதேசத்தின் கங்கை நதியில் அருகே சடலங்கள் கொத்துகொத்தாக எரிக்கப்படுவதை கழுகு பார்வையில் இருந்து இவர் எடுத்த புகைப்படங்கள் இந்தியாவின் மோசமான நிலையை உலகம் முழுவதும் எடுத்துக்காட்டியது. இதோடு மட்டுமின்றி விவசாயிகளின் போராட்டத்தினையும் தன் புகைப்படங்கள் வாயிலாக அறியச்செய்தவர். இப்படி இவருடைய புகைப்படங்கள் மக்களின் பிரச்சனைகளை கண்முன்னே கொண்டுவரச்செய்த நிலையில் தான் இவருக்கு புலிட்சர் விருதும் வழங்கப்பட்டிருந்தது.