இந்தியா அடுத்த 10 நாட்களுக்குள் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணைகளுக்காக வடிவமைக்கப்பட்ட தரை அமைப்புகளின் ஏற்றுமதியைத் தொடங்க உள்ளது. டிஆர்டிஓ தலைவர் டாக்டர் சமீர் வி காமத் கூறுகையில், இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் கப்பல் ஏவுகணைகள் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என தெரிவித்துள்ளார். 






பாதுகாப்பு தொழில்நுட்பத் துறையில், குறிப்பாக சூப்பர்சோனிக் கப்பல் ஏவுகணைத் துறையில் இந்தியாவின் முன்னேற்றத்தை இந்த அறிவிப்பு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. பிரம்மோஸ் ஏவுகணைகளுக்கான தரை அமைப்புகளை ஏற்றுமதி செய்வதற்கான முடிவு, சர்வதேச நாடுகளுடன் உள்நாட்டு திறன்களைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு மூலோபாய நகர்வைக் குறிக்கிறது.


செய்தி நிறுவனத்திடம் பேசிய டாக்டர் காமத், ஆயுதப்படைகளில் டிஆர்டிஓ-உருவாக்கிய தயாரிப்புகளின் வரவிருக்கும் சேர்க்கை பற்றிய நுண்ணறிவுகளை வழங்கினார். ஆயுதப் படையில் கூடுதல் வலுசேர்க்கும் வகையில், LCA Mk-1A, அர்ஜுன் Mk-1A, QRSAM மற்றும் ஆகாஷ் ஏவுகணை அமைப்பு ஆகியவை இடம்பெற்றுள்ளது. டிஆர்டிஓவால் உருவாக்கப்பட்ட பல தந்திரோபாய ஏவுகணைகளையும் அவர் சுட்டிக்காட்டினார். 


தொடர்ந்து பேசிய டாகடர் காமத், குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எடுத்துக்காட்டி, தோராயமாக ரூ. 4.94 லட்சம் கோடி மதிப்பில் டிஆர்டிஓ-வால் உருவாக்கப்பட்ட தயாரிப்புகள், வெற்றிகரமாக defence acqusition council மூலம் அங்கிகாரம் பெறப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணைகள் அவற்றின் துல்லியம் மற்றும் வேகத்திற்காக புகழ்பெற்றவை, அவை நவீன போரில் ஒரு வல்லமைமிக்க சொத்தாக கருதப்படுகிறது. தரை அமைப்புகளை ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கையானது, பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கும், அதன் தொழில்நுட்ப வல்லமையை உலக அரங்கில் வெளிப்படுத்துவதற்கும் உறுதியளிப்பதாக கூறப்படுகிறது. 


பிரம்மோஸ் ஏவுகணை 2004ஆம் ஆண்டு பயன்பாட்டிற்கு வந்த போது 13 சதவீதம் மட்டுமே உள்நாட்டு உதிரி பாகங்கள் இருந்தன. ஆனால் கடந்த 19 ஆண்டுகளில் இது 75 சதவீதமாக அதிகரித்துள்ளது என பிரபல விஞ்ஞானியும் பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் தலைவருமான அதுல் தினகர் ரானே தெரிவித்திருந்தார்.


ஆனால் 100 சதவீதம் உள்நாட்டு தயாரிப்பாக இந்த ஏவுகணையை தயாரிக்க முடியாது. ஏனெனில் பிரம்மோஸ் ஏவுகணை என்பது ரஷ்யா மற்றும் இந்தியாவால் மேற்கொள்ளப்படும் கூட்டு திட்டமாகும். மேலும் ரஷ்யாவின் ஒரு சில தொழில்நுட்பங்களை நாம் சார்ந்துள்ளதால் 100 சதவீதம் எட்ட முடியாது என தெரிவித்தார்.  75 சதவீத உள்நாட்டு தொழில்நுட்பங்களால், பிரம்மோஸ் ஏவுகணையின் ஒட்டுமொத்த விலை வெகுவாகக் குறைந்துள்ளது என்றும் ரானே தெரிவித்தார். 



இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, இந்தோனேசியா, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, தென்ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன. இதன்படி வரும் 2025-ம் ஆண்டுக்குள் பிரம்மோஸ் ஏவுகணை ஏற்றுமதி மூலம் ரூ.41,500 கோடி வருவாய் இலக்கை எட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.