இந்தியாவின் எஃகு மனிதர் என்று அழைக்கப்படும் ஜாம்ஷெட் ஜே. இரானி நேற்று இரவு ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் காலமானார். இவருக்கு வயது 86.


இதுகுறித்து டாடா ஸ்டீல் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "இந்தியாவின் எஃகு மனிதன் காலமானார். பத்ம பூஷன் டாக்டர் ஜாம்ஷெட் ஜே. இரானியின் மறைவு செய்தியை டாடா ஸ்டீல் ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறது. அக்டோபர் 31ஆம் தேதி அன்று ஜாம்ஷெட்பூரில் உள்ள டாடா மருத்துவமனையில் இரவு 10 மணிக்கு காலமானார்.


கடந்த 2011ஆம் ஆண்டு, ஜூன் மாதம், டாடா ஸ்டீல் குழுவிலிருந்து இரானி ஓய்வு பெற்றார். 43 ஆண்டுகால பாரம்பரியத்தை விட்டுச் சென்றார். இது அவருக்கும் நிறுவனத்திற்கும் பல்வேறு துறைகளில் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்று தந்தது.


ஜூன் 2, 1936ஆம் ஆண்டு, நாக்பூரில் ஜிஜி இரானி மற்றும் கோர்ஷெட் இரானிக்கு மகனாகப் பிறந்த டாக்டர் ஜே. இரானி, 1956 இல் நாக்பூரில் உள்ள அறிவியல் கல்லூரியில் BSc மற்றும் 1958 இல் நாக்பூர் பல்கலைக்கழகத்தில் புவியியலில் MSc முடித்தார்.


பின்னர், ஜே. என். டாடா கல்வி நிதி பெற்று இங்கிலாந்தில் உள்ள ஷெஃபீல்டு பல்கலைக்கழகத்திற்கு சென்றார். அங்கு, அவர் 1960இல் உலோகவியலில் முதுகலைப் பட்டமும், 1963 இல் உலோகவியலில் முனைவர் பட்டமும் பெற்றார்.


அவர் 1963 இல் ஷெஃபீல்டில் உள்ள பிரிட்டிஷ் இரும்பு மற்றும் எஃகு ஆராய்ச்சி சங்கத்துடன் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். ஆனால், தேசத்தின் முன்னேற்றத்திற்கு பங்களிக்க எப்போதும் ஏங்கியே இருந்தார். 


கடந்த 1968 ஆம் ஆண்டில் டாடா அயர்ன் அண்ட் ஸ்டீல் நிறுவனத்தில் (இப்போது டாடா ஸ்டீல்) சேருவதற்காக இந்தியாவுக்குத் திரும்பினார். மேலும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான பொறுப்பு இயக்குனரின் உதவியாளராக நிறுவனத்தில் சேர்ந்தார்.


அவர், 1978இல் பொது கண்காணிப்பாளராகவும், 1979இல் பொது மேலாளராகவும், 1985இல் டாடா ஸ்டீல் தலைவராகவும் ஆனார். அவர், 1988 இல் டாடா ஸ்டீலின் இணை நிர்வாக இயக்குநராகவும், 1992 இல் நிர்வாக இயக்குநராகவும் ஆனார். 2001 இல் ஓய்வு பெற்றார்.


கடந்த 1981இல், டாடா ஸ்டீல் வாரியத்தில் அவர் சேர்ந்தார். 2001 முதல் ஒரு 10 ஆண்டுகளுக்கு நிர்வாகம் சாராத இயக்குனராகவும் இருந்தார். டாடா ஸ்டீல் மற்றும் டாடா சன்ஸ் தவிர, டாடா மோட்டார்ஸ் மற்றும் டாடா டெலிசர்வீசஸ் உள்ளிட்ட பல டாடா குழும நிறுவனங்களின் இயக்குநராகவும் டாக்டர் இரானி பணியாற்றினார்.


1992-93 இடைப்பட்ட காலத்தில், இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) தேசியத் தலைவராகவும் பதவி வகித்தார். கடந்த 1996ஆம் ஆண்டில் ராயல் அகாடமி ஆஃப் இன்ஜினியரிங் இன் இன்டர்நேஷனல் ஃபெலோவாக நியமனம் செய்யப்பட்டார். 1997 ஆம் ஆண்டில் இரண்டாம் எலிசபெத் மகாராணியால் இந்திய-பிரிட்டிஷ் வர்த்தகம் மற்றும் கூட்டுறவுக்கான அவரது பங்களிப்புகளுக்காக அவருக்கு பல மரியாதைகள் வழங்கப்பட்டன.


தொழில்துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக 2007 இல் பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. டாக்டர் இரானி 2008 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றார்.