கடந்த 1947ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி நள்ளிரவு, இந்தியாவுக்கு ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் கிடைத்தது. கிட்டத்தட்ட 200 ஆண்டுகாலம், ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் இருந்த இந்தியாவுக்கு பெரும் போராட்டத்திற்கு பிறகே சுதந்திரம் கிடைத்தது. அதை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும், ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி சுதந்திரம் தினம் கொண்டாடப்படுகிறது. எண்ணற்ற இந்தியர்களின் தன்னலமற்ற தியாகங்களும், அவர்கள் வழிநடத்திய சுதந்திரப் போராட்டமும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை.


1947ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 15ஆம் தேதி, இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, டெல்லி செங்கோட்டையில் உள்ள லாஹோரி கேட் என்ற இடத்தில் இந்திய தேசியக் கொடியை ஏற்றினார். அன்றுமுதல், ஒவ்வொரு ஆண்டும் இந்தியப் பிரதமர் செங்கோட்டையில் கொடி ஏற்றி, குடிமக்களுக்கு உரை நிகழ்த்து வருகின்றனர்.


நாட்டின் குடிமக்கள் ஒன்று கூடி, பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் கலாச்சார நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து மிகுந்த உற்சாகத்துடன் இந்த நாளைக் கொண்டாடுகின்றனர். நாளை மறுநாள், இந்தியாவின் 77ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், ​நம் போராட்டத்தையும் தியாகத்தையும் வரலாற்றையும் பறைசாற்றும் வகையிலான பொன்மொழிகளை இந்த தொகுப்பில் காணலாம்.


மகாத்மா காந்தி:


தேசத்தின் தந்தை என்று அழைப்படுபவர் மகாத்மா காந்தி. இந்திய விடுதலைப் போராட்டத்தை தலைமையேற்று நடத்தியவர் மகாத்மா காந்தி. சத்தியாக்கிரக போராட்டம் மூலம் நாட்டின் விடுதலைக்கு கடுமையாக பாடுபட்டவர். மேலும் உப்பு சத்தியாகிரகம், ஒத்துழையாமை மற்றும் வெள்ளையனே வெளியேறு போன்ற முக்ககியமான இயக்கங்களை தொடங்கினார். காந்தி நடத்திய மூன்று முக்கிய விடுதலை போராட்டங்கள் தான் விடுதலைக்கு வழிவகுத்தன.


அவரை நினைவுக் கூறும் வகையில் அவரின் பொன்மொழிகள் சில...



  • மிருகங்களை போல் நடந்து கொள்கிறவன் சுதந்திர மனிதனாக இருக்க முடியாது.

  • கண் பார்வையற்றவன் குருடன் அல்ல. தன் குறையை உணராமல் எவன் இருக்கிறானோ அவனே சரியான குருடன்.

  • மனிதர்களாகிய நமது மிகப்பெரிய திறமை இந்த உலகை மாற்றுவது அல்ல, மாறாக நம்மை நாமே மாற்றிக் கொள்வது.

  • நோயை காட்டிலும் நோயைப் பற்றிய பயமே அதிகமான மனிதர்களைக் கொன்றுள்ளது.

  • நேற்றைய தோல்விகளை பற்றி நிங்கள் நினைத்துக் கொண்டிருந்தால், இன்றைய தோல்விகள் குறைவாகவே இருக்கும்.

  • கண்ணுக்கு கண் தண்டனை என்று இருந்தால் இந்த உலகம் மொத்தமும் குருடாகி விடும்.


பாரதியார்:


தமிழ், தமிழர் நலன், பெண் விடுதலை, தீண்டாமை ஒழிப்பு போன்றவற்றிற்காக ஒரு நூற்றண்டிற்கு முன்னரே தன் கவிதையின் மூலம் முழங்கியவர் தேசிய கவி பாரதியார். இவர், ஒரு கவிஞனாக மட்டும் இல்லாமல் ஒரு சிறந்த எழுத்தாளராகவும், நல்ல பத்திரிக்கையாசிரிராகவும் செயல்பட்டு நாட்டு மக்கள் மத்தியில் சுதந்திர உணர்வை விதைத்தார். பாரதியாரின் பொன்மொழிகள் சிலவற்றை கீழே பார்ப்போம்.



  • ஏழை என்றும் அடிமை என்றும் யாரும் இல்லை சாதியில். இழிவு கொண்ட மனிதர் என்பது இந்தியாவில் இல்லையே. கல்வி செல்வம் எய்தி மனமகிழ்ந்து கூடியே, மனிதர் யாவும் சரி நிகர் சமானமாக வாழ்வோம்.

  • பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்.

  • சாதிகள் இல்லையடி பாப்பா; குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்.


என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?
என்றெம தன்னைகை விலங்குகள் போகும்?
என்றெம தின்னல்கள் தீர்ந்துபொய் யாகும்?
அன்றொரு பாரதம் ஆக்க வந்தோனே,
ஆரியர் வாழ்வினை ஆதரிப் போனே!
வென்றி தருந்துணை நின்னரு ளன்றோ?
மெய்யடி யோம் இன்னும் வாடுதல் நன்றோ?


பஞ்சமும் நோயும்நின் மெய்யடி யார்க்கோ?
பாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ?
தஞ்ச மடைந்தபின் கைவிட லாமோ?
தாயுந்தன் குழந்தையைத் தள்ளிடப் போமோ?
அஞ்சலென் றருள்செயுங் கடமையில் லாயோ?
ஆரிய நீயும்நின் அறம்மறந் தாயோ?
வெஞ்செயல் அரக்கரை வீட்டிடு வோனே,
வீரசிகாமணி, ஆரியர் கோனே!


அம்பேத்கர்:


சட்டமேதை என்று போற்றப்படுபவர் அண்ணல் அம்பேத்கர். சாதியால் ஒடுக்கப்பட்ட பட்டியலின மக்களை பற்ற பேசியவர். இந்தியாவில் ஒடுக்குமுறைகள் எந்த வடிவத்தில் இருந்தாலும் அதற்கு எதிரான சிந்தனை கொண்டவர். அதற்கான செயல்பாடுகளைவும் மேற்கொண்டார். அம்பேத்கர் சட்ட அமைச்சர் பதவியிலிருந்து விலகினார். பெண்களின் உரிமைக்களுக்காக தன் பதிவியையும் தூக்கி ஏறிந்தார். இப்படிப்பட்ட தலைவரின் பொன்மொழியை தற்போது பார்ப்போம்.



  • ஒரு பெண் அடைந்திருக்கும் முன்னேற்றத்தை வைத்துதான் சமூகத்தின் முன்னேற்றம் அளவிடப்படுகிறது

  • அடிமை வாழ்வுதான் கிடைத்த கதி என்ற எண்ணத்தை குழிதோண்டி புதையுங்கள்.

  • தலைவிதி என்ற எண்ணமே தாழ்த்தப்பட்டவர்களின் விடுதலை உணர்வுகளை மரத்துப்போக செய்கிறது.

  • வெற்றியோ, தோல்வியோ எதுவாயினும் கவலை வேண்டாம். யார் பாராட்டினாலும் பாராட்டாவிட்டாலும் கடமையை செய்வோம்.

  • ஒரு லட்சியத்தை எடுத்துக் கொள்ளுங்கள் அதை அடைவதற்காக விடா முயற்சியுடன் உழைத்து முன்னேறுங்கள்.

  • அறிவை தேடி ஓடுங்கள். நாளைய வரலாறு உங்கள் நிழலாக தேடி ஓடி வரும்.


பகத் சிங்:


புரட்சியளர் என்று சொன்னாலே நம் அனைவருக்கும் நினைவில் வருவது பகத்சிங் தான். தன்னுடைய கடைசி மூச்சின்போது தன்னுடைய பாதங்கள் இந்திய மண்ணில் இருக்க வேண்டும் என நினைத்தவர். தூங்கில் தொங்கி சொந்த மண்ணில் கால்படாமல் சாவதை விரும்பாத அவர். தன் உயிர் போகும் கடைசி தருணத்திலும் இந்தியாவின் விடுதலையை பற்றி மட்டுமே நினைத்தார். இவரின் பொன்மொழிகள் சிலதை நினைவுக் கூறுவோம்.



  • கவலைகளை நினைத்து கண்ணீர் சிந்துவதை விட...இலச்சியத்தை நினைத்து உதிரம் சிந்துவது மேலானது.

  • மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ள வரை தான் சட்டம் அதன் புனித தன்மையை பெற்றிருக்கும்.

  • மிக ஆபத்தான ஒன்று குருட்டு நம்பிக்கை. இது மனிதனின் மூளையை முடமாக்கி மனிதனை பிற்போக்கில் தள்ளிவிடும்.

  • தனி நபர்களை கொல்வது எளிது ஆனால், உங்களால் கருத்துக்களை கொல்ல முடியாது.

  • கேளாத காதுகளை கேட்க செய்வதற்கு உரத்த குரல்கள் தேவைப்படுகிறது.

  • இரக்கமற்ற விமர்சனம் மற்றும் சுயசிந்தனை ஆகிய இரண்டு அடிப்படை பண்புகளும் புரட்சிகரமான சிந்தனை அவசியமானதாகும்.


ஜவஹர்லால் நேரு:


சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு, தன்னுடைய அழுத்தமான தடத்தை இந்தியாவின் மீதும், உலகத்தின் மீதும் விட்டுச் சென்றிருக்கிறார் என்பதை எப்போதும் உலகம் அங்கீகரிக்க மறந்ததே இல்லை. சுதந்திர போராட்டத்திலும் சரி, அதற்கு பிறகான காலத்திலும் அவர் ஆற்றிய பங்கு என்பது மகத்தானது. சுதந்திரம் குறித்த அவரின் பொன்மொழிகளை கீழே காண்போம்.



  • எங்கே சுதந்திரம் ஆபத்துக்குள்ளாகிறதோ, அங்கே நாம் நடு நிலைமை வகிக்க முடியாது! வகிக்கவும் கூடாது! 

  • சுதந்திரம் தானாக வரும் பரிசுப் பொருளல்ல....போரிட்டுப் பெற வேண்டிய செல்வம்! 

  • முதலாலித்துவ சமூகத்தில் உள்ள சக்திகளை கண்டுகொள்ளாமலோ, கட்டுப்படுத்தாமலோ விட்டால், பணக்காரர் இன்னும் பணக்காரராகவும், ஏழை இன்னும் ஏழையாகவும் மாறிவிடுவார்கள்.