காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர், அக்கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்கான படிவத்தை பெற்றுள்ளார். இதன் மூலம், அவர் போட்டியிடுவது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் தொடர்பான அறிவிப்பாணை செப்டம்பர் 22ம் தேதி அன்று வெளியிடப்பட்டது.


அதன்படி, தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 24 ம் தேதி முதல் 30 ம் தேதி வரை நடைபெறும் என்றும், அக்டோபர் 17 ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.


ராகுல் காந்தியை மீண்டும் காங்கிரஸ் தலைவராக்க வேண்டும் என்ற கோரிக்கை அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் மீண்டும் எழுந்த போதிலும், காந்தி குடும்பத்தை சேராத ஒருவரே கட்சியின் தலைவராக வேண்டும் என்பதில் ராகுல் காந்தி உறுதியாக இருக்கிறார் என தகவல் வெளியானது. 


இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ராஜஸ்தான் முதலமைச்சருமான அசோக் கெலாட், திருவனந்தபுரம் எம்.பி. சசிதரூர் ஆகியோர் போட்டியிடுவது உறுதியானது. இதையடுத்து, இந்த போட்டியில், மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் கமல் நாத் போட்டியிடலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அவரின் பெயர் பரிசீலனையில் இருப்பதாகவும் போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 


20 ஆண்டுகளுக்கும் பிறகு நடைபெற உள்ள முதல் தேர்தலில் காந்தி குடும்பத்தை சேர்ந்த யாரும் போட்டியிடவில்லை. இச்சூழலில், பல காங்கிரஸ் தலைவர்கள், தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அவர்களில் முன்னாள் மத்திய அமைச்சர்கள் மணீஷ் திவாரி, பிருத்விராஜ் சவான், முகுல் வாஸ்னிக், மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா ஆகியோர் அடங்குவர்.


ஆனால், போட்டியிடுவதற்கான திட்டம் எதுவும் இல்லை என சவான் மற்றும் வாஸ்னிக் மறுப்பு தெரிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இதில், கவனிக்க வேண்டியது என்னவென்றால், ஜி - 23 குழுவை சேர்ந்த தலைவர்கள் போட்டியிட அதிக ஆர்வம் காட்டி வருவது தெளிவாகிறது.


தொடர் தோல்வியை சந்தித்து வரும் காங்கிரஸ் கட்சியில், அதிரடி மாற்றங்களை மேற்கொள்ளக் கோரியும் முடிவுகளை ஒருங்கிணைந்து எடுக்க வலியுறுத்தியும் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் 23 பேர் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினர்.


அதில், முக்கிய தலைவர்களான கபில் சிபல், குலாம் நபிஆசாத் ஆகியோர் கட்சியிலிருந்து வெளியேறிவிட்டனர். இதற்கு மத்தியில், அக்குழுவின் மற்றொரு முக்கிய தலைவர் சசி தரூர், தலைவர் தேர்தலில் போட்டியிடுவதில் அக்குழுவில் உள்ள தலைவர்களின் மத்தியில் ஒரு மித்த கருத்து நிலவவில்லை எனக் கூறப்படுகிறது.


தலைவர் தேர்தலில் போட்டியிடும் விருப்பத்தை தரூர் சோனியாவிடம் தெரிவித்துவிட்டார். இதையடுத்து, நேற்று, திக்விஜய சிங், தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், தான் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடலாம் என தெரிவித்தார்.


போட்டியில் அசோக் கெலாட்டை விரும்புவீர்களா? அல்லது சசி தரூரை விரும்புவீர்களா? என்று தொகுப்பாளர் கேட்டபோது, "பார்ப்போம். போட்டியில் இருந்து நான் என்னை விலக்கவில்லை. என்னை ஏன் ஒதுக்கி வைக்க விரும்புகிறீர்கள்? போட்டியிட அனைவருக்கும் உரிமை உண்டு. அதற்கான பதில் வரும் 30ம் தேதி மாலை தெரிந்துவிடும்” என்ற அவர் பதில் அளித்தார்.