2021 ஆம் ஆண்டு மத்திய அரசானது, அரிய வகை நோய்களுக்கான தேசிய கொள்கை 2021-க்கு ஒப்புதல் அளித்தது. இக்கொள்கையானது, அரிய வகை நோய்களை முன்கூட்டியே தடுக்கும் வகையில் ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிதல் உள்ளிட்டவற்றை நோக்கமாக கொண்டுள்ளது.


இக்கொள்கையின்படி, உள்நாட்டிலேயே ஆராய்ச்சி மேற்கொள்தல், உள்நாட்டிலேயே மருந்துகளை உற்பத்தி செய்தல் உள்ளிட்டவற்றுக்கு கவனம் செலுத்த ஊக்குவிக்கப்பட்டது. மேலும் அரிய வகை நோய்களுக்கான மருத்துவ செலவை குறைக்கவும் தீர்மானிக்கப்பட்டது. 


அரிய வகை நோய்களுக்கான தேசிய கல்வி கொள்கை 2021-ன் படி அரிய வகை நோய்கள்:



  • பாம்ப்பே நோய்,

  • கவுச்சர் நோய்,

  • பேப்ரி நோய்,

  • முதன்மை நோய் எதிர்ப்பு குறைப்பாட்டு நோய்கள்,

  • நீர்மத்திசு அழற்சி,

  • மேப்பிள் சிறுநீரக நோய்


உள்ளிட்ட நோய்கள் அரிய வகை நோய்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.


வரி விலக்கு:


இந்நிலையில் அரிய வகை நோய்கள் தொடர்பாக மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவித்துள்ளதாவது, அரிய வகை நோய்களுக்கான தேசிய கொள்கை 2021இல் குறிப்பிடப்பட்டுள்ள, அனைத்து அரிய வகை நோய்களின் சிகிச்சைக்காக, தனிநபர் பயன்பாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு சுங்க வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




அனைத்து விதமான மருந்துகள் மற்றும் சிறப்பு மருத்துவ தேவைகளுக்கான உணவுகளுக்கும் அடிப்படை சுங்க வரியிலிருந்து மத்திய அரசு முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


இந்த சலுகையை பெறுவதற்கு சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் மருத்துவ அதிகாரி அல்லது மத்திய/ மாநில சுகாதார சேவை இயக்குநரிடமிருந்து சான்றிதழ் ஒன்றை பொருட்களை இறக்குமதி செய்யும் நபர் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக, மருந்துகளுக்கு 10% சுங்க வரியும், உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளின் ஒரு சில பிரிவுகளுக்கு சலுகையாக 5% அல்லது வரி விலக்கு அளிக்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நோயாளிகளுக்கு நிவாரணம்:


முதுகெலும்பு தசை செயலிழப்பு சிகிச்சைக்கான சிறப்பு மருந்துகளுக்கு ஏற்கனவே விலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில், அரிய வகை நோய்களுக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கும் சுங்க வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று பல தரப்புகளில் இருந்தும் அரசுக்கு கோரிக்கைகள் வந்தன.


இதுபோன்ற நோய்களுக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருந்துகள் மற்றும் சிறப்பு உணவுகளின் விலை அதிகம் என்பதால் அவற்றை இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. 10 கிலோ எடையுள்ள குழந்தைக்கு இது போன்ற அரிய வகை நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு வருடந்தோறும் ரூ. 10 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரை தேவைப்படும்.


தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வரி விலக்கால் கணிசமான தொகை சேமிக்கப்படுவதோடு, நோயாளிகளுக்கு பெரும் நிவாரணமும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Also Read: World Idli Day 2023: இன்று உலக இட்லி தினம்; சாதாரண இட்லியில் இவ்வளவு நன்மைகளா…? 5 குணநலன்களை தெரிஞ்சுக்கோங்க!