நாட்டின் தலைசிறந்த கல்வி நிலைங்களாக திகழும் ஐஐடியில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர் கதையாகி வருகிறது. சாதியின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவதாக ஐஐடி மீது தொடர் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வருகிறது.


ஐஐடியில் தொடரும் தற்கொலைகள்:


அதன் தொடர்ச்சியாக, மும்பையில் உள்ள ஐஐடியில் 18 வயது மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. போவாய் பகுதியில் அமைந்துள்ள ஐஐடி கல்லூரியின் மாணவர் விடுதியில் தற்கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி, விடுதியின் 7ஆவது மாடியில் இருந்து குதித்து மாணவர் தர்ஷன் சோலங்கி தற்கொலை செய்து கொண்டார். 


ஐஐடி கல்லூரியில் பட்டியல் சாதி மாணவர்களுக்கு எதிரான பாகுபாடு காரணமாக அவர் தற்கொலைக்குத் தூண்டப்பட்டதாக மாணவர் குழுவினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இது தொடர்பாக, போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதற்கிடையே, வழக்கின் விசாரணை காவல்துறையிடம் இருந்து சிறப்பு விசாரணை குழுவுக்கு மாற்றப்பட்டுள்ளது. 


இந்நிலையில், இந்த வழக்கில் காவல்துறை தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். அதில், பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரியில் சாதிய பாகுபாடு நிலவியதாக தன்னுடைய தாயிடம் தர்ஷன் சோலங்கி தெரிவித்திருப்பதாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


குற்றப்பத்திரிகையில் பகீர் தகவல்கள்:


தன் சாதியைப் பற்றி அறிந்ததும் சக மாணவர்கள் நடந்து கொள்ளும் விதம் மாறியதாகவும் தொலைபேசி உரையாடல்களின் போது தர்ஷன் சோலங்கி தனது தாயிடம் கூறினார். பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டத்தின் சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று காவல்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின் ஒரு பகுதியாக சோல்னாகியின் தாயின் வாக்குமூலம் இடம்பெற்றுள்ளது.


"2023ஆம் ஆண்டு, ஜனவரி மாதம், மகர சங்கராந்தி விடுமுறையின் போது சோலங்கி தனது சகோதரியிடம் இதைப் (சாதிய பாகுபாடு) பற்றி மீண்டும் பேசினார். சோலங்கியின் சகோதரி மற்றும் அத்தையும் கூட, அவர் சாதி பாகுபாட்டை எதிர்கொண்டதாகவும், சாதி குறித்து அறிந்ததும் மற்ற மாணவர்கள் நடந்து கொள்ளும் விதம் மாறியதாக வாக்குமூலம் அளித்தனர்" என குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


குற்றப்பத்திரிகையில் தற்கொலைக்கு தூண்டியதாக கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்துள்ள சக மாணவர் அர்மான் காத்ரி பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. மதத்தைப் பற்றி சோலங்கி அவதூறாகப் பேசியதையடுத்து காத்ரி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.


முன்னதாக, இந்த வழக்கின் விசாரணையில் காவல்துறை தன் குடும்பத்தை கொடுமைபடுத்தியதாக கூறி மாணவரின் தந்தை மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே கடிதம் எழுதியுள்ளார்.


அந்த கடிதத்தில், "கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய மறுத்தனர். காவல்துறை மற்றும் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) உறுப்பினர்களின் அணுகுமுறையால் குடும்பத்தினர் முற்றிலும் அதிர்ச்சியும் மனமுடைந்தும் உள்ளனர்.


எனது மகன் இறந்த வழக்கில் மார்ச் 16 அன்று நான் அளித்த புகாரின் அடிப்படையில் எப்ஐஆர் பதிவு செய்வதற்காக நான் எனது குடும்பத்தினருடன் அகமதாபாத்தில் இருந்து போவாய் காவல் நிலையத்திற்குச் சென்றிருந்தேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இருப்பினும், நாங்கள் கோரிக்கை விடுத்தும் போவாய் காவல் நிலையம் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய மறுத்துவிட்டது.